Janu / 2026 ஏப்ரல் 26 , பி.ப. 04:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு முன்பாக மோட்டார் சைக்கிள்களின் இருக்கைகளை (Seat) உடைத்து, அவற்றுக்குள் இருந்த கையடக்க தொலைபேசிகள் மற்றும் தங்க ஆபரணங்களை திருடி வந்த சந்தேக நபரை எதிர்வரும் மே மாதம் 08 ஆம் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் சனிக்கிழமை (25) உத்தரவிட்டுள்ளது.
வவுணதீவு பகுதியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு முன்பாகவுள்ள வாகன தரிப்பிடத்தில் மோட்டார் சைக்கிள்களை நிறுத்திவிட்டு நீதிமன்றங்களுக்கு செல்பவர்களை குறிவைத்து, இத்திருட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது.
போலியாக தயாரிக்கப்பட்ட சாவிகளை பயன்படுத்தி மோட்டார் சைக்கிள் இருக்கைகளை திறந்து, அவற்றுக்குள் வைக்கப்பட்டிருக்கும் பணம் மற்றும் தொலைபேசிகளை இவர் திருடி வந்துள்ளார்.
கடந்த 24 ஆம் திகதி குறித்த பகுதியில் இளைஞன் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உலாவிக் கொண்டிருந்தபோது, அங்கிருந்த பொலிஸ் புலனாய்வு பிரிவினர் அவரை பிடித்து விசாரணைக்கு உட்படுத்தியுள்ளதுடன் இதன்போது, அங்கு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றிலிருந்து கையடக்க தொலைபேசி மற்றும் பணத்தை திருடியதை அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, வவுணதீவில் உள்ள சந்தேகநபரின் வீட்டிற்கு சென்ற பொலிஸார், கூரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு கையடக்க தொலைபேசியையும், 9 ஆயிரம் ரூபாய் பணத்தையும் மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது, அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, மட்டக்களப்பு நகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களில் இருந்து 24 கிராம் தங்க ஆபரணம் மற்றும் 3 கையடக்கத் தொலைபேசிகள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கனகராஜா சரவணன்

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .