2025 மே 15, வியாழக்கிழமை

‘சலுகைகளுக்கே சென்றுள்ளார்’

வடிவேல் சக்திவேல்   / 2018 நவம்பர் 04 , பி.ப. 02:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

அற்ப சலுகைகளைப் பெறுவதற்காகவே, வியாழேந்திரன் எம்.பி, புதிய அரசாங்கத்தில் இணைந்துகொண்டுள்ளார் என, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் குற்றஞ்சாட்டினார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து கொண்டு, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு ஆதரவு தெரிவித்து, பிரதியமைச்சர் பதவியை ஏற்றுள்ள வியாழேந்திரனின் முடிவு தொடர்பில், இன்று (04) கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எமது கூட்டமைப்பிலிருந்து நீண்டகாலமாக மாறக்கூடிய சூழலில் இருந்து வந்த நிலையிலேயே, அவர் தற்போது மாறியிருக்கின்றார் என்றார்.

வியாழேந்திரனின் அண்மைக்கால செயற்பாடுகள் தொடர்பில், தமது கட்சியின் தலைமைப் பீடத்துக்கு அறிவித்திருந்ததாகவும் அதில் தாம் எச்சரிக்கையாக இருந்தாகவும் தெரிவித்த யோகேஸ்வரன் எம்.பி, ஆனால், வியாழேந்திரன் திடீரென கனடாவுக்குச் சென்றிருந்த நிலையில், மீண்டும் இலங்கை வந்ததும் விமான நிலையத்திலிருந்தே நேரடியாக புதிய அரசாசத்திடம் சென்றுவிட்டார் என்று சாடினார்.

அத்துடன், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.சந்திரகாந்தனின் கல்விப் பொறுப்பாளராக அவர் செயற்பட்டார் என்றும் அவர் கற்பிக்கும் பிரத்தியேக வகுப்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சுருக்கப் பெயராக உள்ள “த.தே.கூ” என்ற எழுத்துகளை, மாணர்கள் மத்தியில் எழுதி, “தமிழர்களுக்குத் தேவையற்ற கூட்டமைப்பு” என அர்த்தம் கற்பித்து படிப்பித்தார் என்றும், பின்னர் அவருக்கு தமது கூட்டமைப்பு தேவைப்பட்டது என்றும் யோகேஸ்வரன் எம்.பி தெரிவித்தார்.

மேலும், வியாழேந்திரன், புளட் கட்சி சார்ந்தவராக இருந்தலும், தங்களது தமிழரசுக் கட்சியில்தான் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றிருந்தர் எனச் சுட்டிக்காட்டிய அவர், அதற்கிணங்க, தமது கட்சியிலிருந்து அவரை நீக்குவதாக, தமிழரசுக் கட்சியின் செயலாளர் நாயகம், தேர்தல் ஆணையாளருக்குக் கடிதம் அனுப்பி வைப்பார் என்றும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .