2025 மே 12, திங்கட்கிழமை

சாரதி தாக்கப்பட்டமையைக் கண்டித்து வாழைச்சேனை சாலை ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 29 , மு.ப. 07:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்

இலங்கை போக்குவரத்துச் சபையின் வாழைச்சேனை சாலையினுடைய சாரதி ஒருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டதை கண்டித்து அச்சாலையின் ஊழியர்கள் இன்று வெள்ளிக்கிழமை பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

இலங்கை போக்குவரத்துச் சாலையின் வாழைச்சேனை சாலைக்குச் சொந்தமான பஸ் கல்முனையிலிருந்து பருத்தித்துறை வரை சேவையிலிருந்து ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில் பருத்தித்துறையிலிருந்து காலை 09 மணிக்கு புறப்படும் பஸ் இரவு 07.30 மணிக்கு கல்முனையை வந்தடையும்.

இந்த பஸ் வவுனியாவுக்கு மதியம் 12.30 மணிக்கு வந்து அங்கிருந்து  12.35 மணிக்கு கல்முனை நோக்கிப் புறப்படும். இதேவேளை, வவுனியாவிலிருந்து தனியார் பஸ் மதியம் 12.15 மணிக்கு கல்முனை நோக்கிப் புறப்படுவது வழக்கம்.

தனியார் பஸ்ஸை இலங்கை போக்குவரத்துச் பஸ் முந்தி வருவதால் தினமும் இரண்டு பஸ் சாரதி மற்றும் நடத்துநர்களுக்கிடையில் வாக்குவாதம் இருந்து வந்தது. இந்நிலையில்,  நேற்று வியாழக்கிழமை பொலன்னறுவையில்  தனியார் பஸ் நடத்துநரும் சாரதியும் இலங்கை போக்குவரத்துச் சபை சாரதி மற்றும் ஊழியர்களை தாக்கியுள்ளனர்.

இலங்கை போக்குவரத்துச் சாலையின் வாழைச்சேனை சாரதியும் நடத்துநரும் தாம் தாக்குதலுக்குள்ளானமை தொடர்பில் பொலன்னறுவை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துவிட்டு, வாழைச்சேனை சாலை முகாமையாளருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடைபெற்ற சம்பவத்தை தெரியப்படுத்தியுள்ளனர்.

தாக்குதலுக்குள்ளான சாரதிக்கு தொடர்ந்து பஸ்ஸை செலுத்த முடியாமையினால்,  வேறு ஒரு சாரதியை  பஸ்ஸை செலுத்திச் செல்ல ஏற்பாடு செய்யுமாறும் கோரியுள்ளனர்.  

வாழைச்சேனைக்கு இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான குறித்த  பஸ் வந்ததும் வாழைச்சேனை பொலிஸில் நடந்த சம்பவம் தொடர்பாக மீண்டும் முறைப்பாடு செய்ததுடன், சாரதி மாற்றப்பட்டு பஸ் கல்முனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

காயப்பட்ட சாரதி வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளை, வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் கறுவாக்கேணி என்ற இடத்தில் தனியார் பஸ் சாரதியும்  இனந்தெரியாதோரினால் தாக்குதலுக்குள்ளானதைத் தொடர்ந்து அவரும் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

தனியார் பஸ் சாரதியும் வாழைச்சேனை பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையிலயே வாழைச்சேனை போக்குவரத்துச் சாலையின் சாரதி கல்முனைக்கு சென்று மீண்டும் வாழைச்சேனைக்கு வந்த வேளை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட சாரதி விடுவிக்கப்பட வேண்டும் என்றும் தனியார் பஸ் சாரதி கைதுசெய்யப்பட வேண்டும் என்று கோரி பகிஷ்கரிப்பு  இடம்பெறுவதாகவும் கைதுசெய்யப்பட்ட சாரதி விடுதலை செய்யப்படாவிட்டால் இப்பணிப்பகிஷ்கரிப்பு நாளை கிழக்கு மாகாணம் சார்ந்ததாக முன்னெடுக்கப்படுமென வாழைச்சேனை சாலை ஊழியர்கள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X