Suganthini Ratnam / 2016 ஜூன் 30 , மு.ப. 05:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
சிறுமிகள் இருவர் சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட இரண்டாவது சந்தேக நபரான அச்சிறுமிகளின் சிறிய தந்தையை ஜுலை 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.எம்.றிஸ்வி உத்தரவிட்டுள்ளார்.
நேற்றுப் புதன்கிழமை மேற்படி சந்தேக நபர் ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போதே ஜுலை 13ஆம் திகதி வரை விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தமக்கு தமது சிறிய தந்தையும் சித்திரவதை செய்ததாக சிறுமிகள் அளித்த வாக்குமூலத்தின்படி ஏறாவூர் பொலிஸார் மேற்படி சந்தேக நபரை (வயது 32) 04.06.2016 அன்று கைது செய்திருந்தனர். அன்றிலிருந்து தொடர்ந்து மூன்றாவது முறையாக சந்தேக நபருக்கான விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.
சிறுமிகளின் சிற்றன்னை (48 வயது) ஏற்கெனவே பொலிஸாரால் கைது செய்யப்பட்டு அவருக்கு 4 மாத கைக்குழந்தை இருப்பதன் காரணமாக பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சகோதரிகளான சிறுமிகள் இருவர் கடும் சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட நிலையில் கடந்த 01.06.2016 அன்று ஏறாவூர் முகாந்திரம் வீதியிலுள்ள வீடொன்றிலிருந்து மீட்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
சிறுமிகள் அளித்த வாக்குமூலத்தின்படி தமது சிற்றன்னையின் கணவரும் தமக்கு தொடர்ந்து பல்வேறான தாக்குதல்களையும் கொடுமைகளையும் சித்திரவதைகளையும் இழைத்து வந்ததாகத் தெரிவித்ததன் அடிப்படையிலேயே சிறுமிகளின் சிறிய தந்தையும் கைது செய்யப்பட்டார்.
தேநீருக்குள் உப்புக்; கலந்தும் உணவில் உண்ணமுடியாதளவுக்கு மிளகாய்த் தூள் தூவியும் தந்ததோடு நடு நிசிகளிலும் தங்களை நித்திரையிலிருந்து அடி ஆக்கினைகள், மற்றும் சூடு வைத்து எழுப்பி வீட்டு வேலைகளைச் செய்யுமாறு பணித்ததாகவும் சிறுமிகள் கூறியுள்ளனர்.
இந்த சிறுமிகள் நீண்டகாலமாக பாடசாலைக்கு அனுப்பப்படவில்லை என்பதும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
சிறுமிகளின் தாய் வறுமை காரணமாக மத்திய கிழக்கு நாடொன்றுக்கு வீட்டுப் பணிப்பெண்ணாகச் சென்றுள்ளார். சிறுமிகளின் தந்தை அவரது தாயுடன் பொலன்னறுவையில் வாழ்ந்து வருகின்றார்.
சிறுமிகளின் தாய் வெளிநாடு செல்லும்போது இந்தச் சிறுமிகளை சிற்றன்னையிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்றதாக சிறுமிகள் தெரிவித்துள்ளனர்.
2 hours ago
23 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
23 Dec 2025