Suganthini Ratnam / 2016 செப்டெம்பர் 13 , மு.ப. 08:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பேரின்பராஜா சபேஷ், ஏ.எச்.ஏ.ஹுஸைன்
மட்டக்களப்பு, ஏறாவூர் பிரதேசத்தில் இடம்பெற்ற இரட்டைக்கொலைச் சம்பவம் தொடர்பில் கொல்லப்பட்ட 32 வயதுடைய பெண்ணின் கணவர் உட்பட இதுவரையில் 13 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
இக்கொலைச் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக இன்று செவ்வாய்க்கிழமையும் குடும்ப உறவினர் ஒருவர் உட்பட 5 பேர் விசேட பொலிஸ் குழுவினரால் அழைத்துச்செல்லப்பட்;டனர்.
இதேவேளை, உரிய முறையில் பொலிஸார் விசாரணையை மேற்கொள்வதற்கு ஏதுவாக முகாந்திரம் வீதியின் போக்குவரத்து சிறிதுநேரம் கட்டுப்படுத்தப்பட்டது.
ஏறாவூர் பிரதேசத்தில் முகாந்திரம் வீதியை அண்டியுள்ள வீடொன்றில் தாயும் மகளும் கொலை செய்யப்பட்ட நிலையில், அவர்களின் சடலங்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை (11) மீட்கப்பட்டன. நூர்முஹம்மது ஹுஸைரா (வயது 56) மற்றும் அவரது திருமணமாகிய மகளான முஹம்மது யூசுப் ஜெஸீரா பாணு (வயது 32) ஆகியோரே சடலங்களாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விசாரணைக்காக நேற்றையதினம் அழைத்துச்செல்லப்பட்ட 5 பேரில் 4 பேர் குறித்த வீட்டுக்கு அடிக்கடி சென்றுவருபர்கள். மற்றையவர் குடும்ப உறவினராவார். குறித்த குடும்ப உறவினர், கொல்லப்பட்ட பெண்ணுடன் அடிக்கடி அலைபேசியில் உரையாடியிருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலங்களுக்கு அருகில் 3 அலைபேசிகள் காணப்பட்டதுடன், அவற்றிலொன்று ஏற்கெனவே செயலிழந்திருந்தது. கொல்லப்பட்ட 32 வயதுடைய பெண் சம்பவதினத்தன்று அதிகாலை 1.30 மணியளவில் கட்டாரிலிருந்த அவரது கணவருடன் 14 நிமிடமும் 14 செக்கன்களும் அலைபேசியில் உரையாடியிருந்தமை தொடர்பிலும் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
இவ்வாறிருக்க, சம்பவ தினத்தன்று கொலை இடம்பெறுவதற்கு முன்னரும் அதன் பின்னரும் கொலை இடம்பெற்ற வீட்டை அண்டிய வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று நடமாடித்திரிந்தமை தொடர்பில் அங்குள்ள பலசரக்குக் கடை மற்றும் வீடொன்றிலும் பொருத்தப்பட்டிருந்த கமெராக்களில் பதிவாகியுள்ளது.
எனினும், இந்த மோட்டார் சைக்கிளின் இலக்கம் தெளிவாகத் தெரியவில்லை. அம்மோட்டார் சைக்கிள் பற்றிய விவரத்தைக்; கண்டறிவதற்காக பரிசோதனை செய்யும் பொறுப்பு மொறட்டுவைப் பல்கலைக்கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .