2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

'மக்களின் அடிப்படை வசதிகளை நாங்களே ஏற்படுத்தும் நிலை உருவாகும்'

Suganthini Ratnam   / 2016 மே 15 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

'இனப்பிரச்சினை என்கின்ற விடயம் முறையான அதிகாரப்பகிர்வு மூலமாக, சமஷ்டி முறை மூலமாக தீர்க்கப்படுகின்றபோது நாங்கள் மத்திய அரசை எதிர்பார்த்துக்கொண்டிருக்காது எங்களுடைய மக்களின் அடிப்படை வசதிகள,; வாழ்வாதாரங்கள், தொழில்வாய்ப்புகளை நாங்களே கட்டியெழுப்பக்கூடிய ஒரு நிலை ஏற்படும் என தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு  பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் மோசமான வீதிகளை திருத்தும் பணி வீதி அபிவிருத்தி அதிகாரசபையால் சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'தற்போதைய சூழ்நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் பின்னர் நல்லாட்சி என்ற அடிப்படையில் ஆட்சி நிறுவப்பட்டிருப்பதன் ஓர் அம்சமாக கடந்த காலங்களில் ஆளுங்கட்சியோடு சார்ந்துதான் சகல விதமான அபிவிருத்திப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

தற்போது ஒரு மாற்றமான சூழலில் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சுக்கூடாக 10 கிலோமீற்றரை அபிவிருத்தி செய்வதற்கு 6 கோடி ரூபா எனும் செயல்திட்டத்தினை எதிர்கட்சிகளுக்கும் வழங்கியிருக்கின்றது.

அத்துடன் குன்றும் குழியுமாக இருக்கும் பாதைகளை செப்பனிடுவதற்கு மேலதிகமாக 50 இலட்சம் ரூபாவை வழங்கியிருக்கின்றது. இது உண்மையில் ஒரு மாற்றமாகும். கடந்த காலத்தில் ஒட்டுமொத்தமான அபிவிருத்திப் பணிகளையும் ஆளுங்கட்சியே செய்கின்ற நிலை காணப்பட்டது. தற்போதைய நிலையில் அமைச்சர் மேற்கொண்ட இந்த முடிவு வரவேற்கத்தக்கது. ஏனைய அமைச்சுகளிலும் இப்படியான மாற்றம் ஏற்பட வேண்டும்.

இன்றும்கூட ஆளுங்கட்சி சார்ந்தவர்களுக்கத்தான் தொழில் வாய்ப்புகள் வழங்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. எதிர்க்கட்சிகளுக்கு வாக்களித்தவர்களுக்கு தொழில் வாய்ப்புகள் மறுக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. நெடுஞ்சாலைகள் அமைச்சரின் இந்த முன்மாதிரி நடவடிக்கையை ஏனைய அமைச்சுகளும் பின்பற்றி யுத்தத்தால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரமிழந்து எந்தவித தொழில் வாய்ப்புகளும் இல்லாதிருக்கின்ற மக்களை ஒதுக்கி வைக்காமல் அவர்களுக்கு தொழில்வாய்ப்புகளை வழங்கும் விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும்' என்றார்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X