2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

'யுத்தமும் சுனாமியும் இலங்கை மக்களுக்கு சவாலாகியுள்ளன'

Suganthini Ratnam   / 2016 ஒக்டோபர் 27 , மு.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

கடந்த 30 வருடகாலமாக இலங்கையில் இடம்பெற்ற பயங்கரமான யுத்தம் மற்றும் சுனாமியின் தாக்கமும் இலங்கையிலுள்ள மக்களுக்குச் சவாலாகியுள்ளதாக இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் ஷெல்லி விட்டிங் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கும் ஒரேயொரு அரச புனர்வாழ்வு மையமான மாவடிவேம்புப் பிரதேசத்திலுள்ள உளநல புனர்வாழ்வு நிலையத்துக்கு புதன்கிழமை (26) மாலை விஜயம் செய்த அவர், அங்கு புனர்வாழ்வு பெற்றுவருபவர்களைப் பார்வையிட்டார். இதன் பின்னர் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் தெரிவித்தபோது, 'கனடாவில் இலங்கை வாழ் பெரிய சமூகம் உள்ளது. அவர்கள் இலங்கையிலிருந்து வந்தாலும், அவர்கள் விட்டுச்சென்றதை நினைவுகூருகின்றனர். அவர்கள் கனடாவில் வாழ்ந்தாலும், இலங்கையிலுள்ள அவர்களது சமூக உறவுகளுக்கு நன்றி உடையவர்களாக இருந்து ஆதரவு அளிப்பார்கள். அங்கிருந்தவாறு அவர்கள் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உதவுவதை கிழக்கு மாகாணத்துக்கான வி;ஜயத்தின்போது நான் கண்டறிந்தேன்.

அவர்கள் இன்னமும் நிறையச் செய்யவேண்டியுள்ளது என்பதையும் கனடாவிலுள்ள இலங்கைச் சமூகத்துக்கு நான் கூற விரும்புகின்றேன். பாதிக்கப்பட்ட மக்களுக்கான மீளமைப்புப் பணியில் கனடா வாழ் இலங்கைச் சமூகம் சம்பந்தப்பட வேண்டியுள்ளது.

கனேடிய அரசாங்கமும் குறிப்பாக, பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிலும் குறிப்பாக, இளம் பெண்களை மேலும் இலகுவில் பாதிக்கப்படக்கூடிய சமூகத்துக்கும் தொழிற்பயிற்சிகளை வழங்கி வலுப்படுத்துவதில் அர்ப்பணித்துள்ளது' என்றார்.
'இந்த நாடு கனடாவைப் போல் பல்மொழிக் கலாசாரத்தைக் கொண்டது என்பதால், மொழியின்பால் பணியாற்றுவதும் மிக முக்கியமானது என்பதையும் நான் இவ்விடத்தில் குறிப்பிட விரும்புகின்றேன். அந்த விடயத்தில் இன்னமும் கருமம் ஆற்ற வேண்டியுள்ளது.

நீங்கள் அரசாங்க நிர்வாகத்தில் சேவையைப் பெற்றுக்கொள்வதாயினும் அல்லது சேவை செய்வதாயினும் உங்களுக்கு பரஸ்பரம் சிங்களமொழியோ அல்லது தமிழ்மொழியோ தெரிந்திருக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு தொழிற்பயிற்சி கிடைப்பதானது அவர்களின் பொருளாதாரத்துக்கு உதவக்கூடும். வாழ்க்கையின் நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கு அது ஒரு வழியாகவும் இருக்கும்' எனவும் அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X