2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

மத்திய கிழக்குக்கு பெண்கள் போகக்கூடாது என்பது இலக்கு

Suganthini Ratnam   / 2014 ஜூலை 13 , மு.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
,வடிவேல் சக்திவேல்

கிழக்குப் பிராந்தியத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள  எந்தப் பெண்களும் வீட்டுப் பணிப்பெண்களாக மத்திய கிழக்குக்கு போகக்கூடாது என்பது இலக்கு.  அவ்வாறு வேறேதும் தொழில்வாய்ப்பு பெற்றுப் போவதாக இருந்தால், அது பயிற்றப்பட்ட உயர் தொழில் ஆற்றல்களுடன் கூடிய தொழில் வாய்ப்புக்களுக்காகவே அவர்களை அனுப்ப வேண்டும் என   கிழக்கு மாகாண  விவசாய கால்நடை உற்பத்தி அபிவிருத்தி, கிராமிய கைத்தொழில் அபிவிருத்தி, மீன்பிடி சுற்றுலாத்துறை அமைச்சர் நஸீர் அஹமட்  தெரிவித்தார்.

ஏறாவூர் சிறுகைத்தொழில் பேட்டையில் நேற்று சனிக்கிழமை (12) நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

 “இனிவரும் காலத்தில் மத்திய கிழக்குக்கு கல்வியாளர்களாக அல்லது மருத்துவத் தாதிகளாக செல்வதற்கு  இங்குள்ளவர்களை நாம் உருவாக்க வேண்டும். வெறுமனே அடுப்பங்கரை வேலை செய்யும் அடிமைகளாக அரபு தேசங்களுக்குச் செல்ல வேண்டியதில்லை.

முஸ்லிம்கள் என்ற வகையில் கடந்தகால பயங்கரவாதத்தின் இலக்காக இந்த ஏறாவூர் இருந்தது. அதனால், மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு இந்த ஊர் திறந்தவெளி அகதி முகாமாக மாறியிருந்தது. ஒரே இரவில் 162 பேர் வெட்டியும் குத்தியும் அடித்தும்  தாக்குதலுக்கு உள்ளாகியதுடன், தீயிட்டும் கொளுத்தப்பட்டனர்.

அந்த நேரத்தில் பலர் கைம்பெண்களாக ஆக்கப்பட்டனர். ஏறாவூரில் தற்போது 2,000  பேர்  கைம்பெண்களாக உள்ளனர்.

ஏறாவூர் மக்களை எங்கோ ஒரு பகுதிக்கு விரட்ட வேண்டும் என்பதற்காக பயங்கரவாதிகள் இந்த ஊரைச் சூழ்ந்திருந்த நிலையில், மாதக்கணக்கில் இருள் சூழ்ந்த காலமொன்று இருந்தது.

தொழிலுக்குச் செல்ல முடியாத நிலையில், அகதி முகாம் வாழ்க்கையாக நாட்கள் நகர்ந்தன. இதனால், பல பெண்கள் தங்களது வாழ்வாதாரத்தை தேடி வீட்டுப் பணிப்பெண்களாக மத்திய கிழக்குக்கு  புறப்பட்டனர்.

இனிமேல் இந்த நாட்டில் இந்த இரண்டு சூழ்நிலைகளும் உருவாகக்கூடாது. அதாவது, பயங்கரவாதம் தலையெடுக்கவும் கூடாது. பெண்கள் மத்திய கிழக்குக்கு பணிப்பெண்களாகச் செல்லவும் கூடாது.

எங்களது கடமை பாதிக்கப்பட்ட எல்லா மக்களுக்கும் தமிழ், முஸ்லிம், சிங்களம் என்ற வேறுபாடு இல்லாமல் அவர்களை பாதிப்புக்களிலிருந்து மீட்டெடுப்பதேயாகும்.

எதிர்காலத்தில் இந்த ஊரை ஒரு நவீன தொழில் உற்பத்திப் பேட்டையாக மாற்றுவதே நோக்கமாகும். எவரும் பிறரின் உதவியில் தமது வாழ்வாதாரத்துக்காக  தங்கியிருக்காத நிலைக்கு கொண்டுவர வேண்டும். நிவாரணங்களையும் இன்ன பிற உதவிளையும் எதிர்பார்த்திருக்காதவாறு  சொந்தக் காலில் நின்று உழைக்கக்கூடிய மக்களாக இவர்களை மாற்ற வேண்டும்.

அடுத்த வருட றமழான் நோன்புக்கு இடையில் இந்த ஊரில் குறைந்தபட்சம் பல்வேறு விதமான 04 தொழிற்சாலைகள் இயங்கும். இவற்றில்  பல பெண்களும் ஆண்களும் தொழில்வாய்ப்புப் பெறுவர்” என்றார்.


  Comments - 0

  • வை.எல்.மன்ஸூர் Monday, 14 July 2014 03:13 AM

    வாழ்த்துக்கள்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X