2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

'வாழ்வாதார உதவிகளை சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டும்'

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 14 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

வாழ்வாதார உதவிகளை பயனாளிகள் சிறந்த முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என முஸ்லிம் எய்ட் ஸ்ரீலங்கா கள நிலையத்தின் இலங்கைக்கான பிரதிநிதி ஏ.சி.பைஸர்கான் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, ஓட்டமாவடிப் பிரதேச செயலாளர் பிரிவின் கீழுள்ள தெரிவுசெய்யப்பட்ட  10 மீனவக் குடும்பங்களுக்கு  சுமார் 37,500 ரூபாய் பெறுமதியான 10 தோணிகள்  நேற்று வியாழக்கிழமை வழங்கப்பட்டது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

'கடந்த காலங்களில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்த நீங்கள், இப்பொழுது நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றீர்கள்.  கடலுக்குச் சென்ற மீனவர்கள் உயிரோடு திரும்பிவர முடியவில்லை. வலைகளுடன் மீன்பிடிப் படகுகள் திரும்பவில்லை. கடத்தல், கப்பம், கொலை என்று எல்லா வகையான பாதிப்புக்களுக்கும் மீனவர்கள் முகம் கொடுத்தார்கள்.

தமது உறவுகளை மீன்பிடிக்காக கடலுக்கு அனுப்பிவிட்டு கரையில் மீனவக் குடும்பங்கள் கண்ணீருடன் காத்திருந்த காலம் ஒன்றிருந்தது.  அவ்வாறான சூழ்நிலை இப்போதில்லை. இப்போது கடலுக்குச் செல்லும் மீனவர்கள் அவர்களின் படகுகள், வலைகளுடன் பத்திரமாக திரும்பிவருகின்றார்கள். அதேவேளை, கரையிலுள்ள உறவுகளும் ஏக்கப் பெருமூச்சின்றி நிம்மதியாக காலம் கழிக்கின்றார்கள்.  எனவே, இந்த சூழ்நிலையை பயன்படுத்தி அரசும் அரசசார்பற்ற நிறுவனங்களும் தருகின்ற வாழ்வாதார உதவிகளைக் கொண்டு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட நீங்கள் முன்னேறவேண்டும்.

நாம் தருகின்ற வாழ்வாதார தொழிலுபகரணங்கள் மூலம் நீங்கள் பெறுகின்ற வருமானத்தின் ஒருபகுதி உங்களது குழந்தைகளின் கல்விக்காக ஒதுக்கப்படவேண்டும். அதன் மூலம் கல்வி அறிவுடன் கூடிய பொருளாதார வளர்ச்சி ஏற்படும்.

யுத்தம் காரணமாக வடக்கு, கிழக்குப் பகுதிகளில் வாழும் சிறுபான்மைச் சமூகங்களின் கல்வி மிகவும் பின்னடைந்திருந்தது. ஆயினும், அதனை மீளடைந்துகொள்ள வேண்டும். அதேவேளை, கல்விப் பின்னடைவுக்கு வறுமையே காரணம் என்று தொடர்ந்து கூறிக்கொண்டிருக்க முடியாது.
 கல்வி, சமூக, பொருளாதார வளர்ச்சியில் சிறுபான்மை சமூக மக்கள் இன்னும் அதிகப்படியான அக்கறை எடுக்க வேண்டும்.' எனக் கூறினார்.

இதன்போது ஓட்டமாவடி பிரதேச செயலாளர் எம்;.எம்.எம்.நவ்பல் உரையாற்றுகையில்,

'பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி கிடைக்கப்பெறாமல் பின் கதவால் வருபவர்களுக்கு உதவிகள் வழங்கப்படுகின்ற மோசடியான நிலைமைகளால், சமூகத்தில் ஐக்கியம் சீர்குலைக்கப்படுகிறது.

முஸ்லிம் எய்ட் நிறுவனம் மிகப் பொருத்தமானவர்களை தெரிவுசெய்து பயனாளிகளுக்கு தேவையான, பொருத்தமான உதவிகளை முழுமையாக வழங்குவதையிட்டு பிரதேச செயலாளர் என்கின்ற வகையில் நானும் பயனாளிகளும் திருப்தியடைய முடியும். உரியவர்களுக்கு உரிய உதவி கிடைக்கப்பெற்றால் தான் அதன பலாபாலன்களை அடைய முடியும்' எனக் கூறினார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X