2025 மே 17, சனிக்கிழமை

சந்தனமடு ஆற்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2015 மே 19 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

.ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சந்தனமடு ஆற்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம்  திங்கட்கிழமை (18)  இரவு மீட்கப்பட்டதாக   ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

பலாச்சோலையைச் சேர்ந்த கந்தையா பத்மநாதன் (வயது 55) என்பவரே சடலமாக மீட்கப்பட்டார்.

இந்த ஆற்றில் முதலைகளின் நடமாட்டத்துக்கு மத்தியிலேயே இந்த  சடலம்   தம்மால் மீட்கப்பட்டதாகவும்   பொலிஸார் கூறினர்.

இந்த நபர் கடந்த 14ஆம் திகதி சந்தனமடு ஆற்றில்  நீந்திச் சென்றுகொண்டிருந்தபோது, காணாமல் போயிருந்ததாக இவரின்  உறவினர்கள் கரடியனாறு பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர்.

இதைத் தொடர்ந்து, மேற்படி ஆற்றில்  பொலிஸாரின் உதவியுடன்  தேடுதல் நடவடிக்கை  உறவினர்களாலும் ஊர்மக்களாலும் முன்னெடுக்கப்பட்டது. இருப்பினும், இவர் தொடர்பில் உடனடியாக எதுவும் தெரியவரவில்லை.
இந்த நிலையில், மேற்படி  ஆற்றில் திங்கட்கிழமை (18) மாலை சடலம் மிதப்பதை கண்டவர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கினர். இதைத் தொடர்ந்து இந்தச் சடலம் மீட்கப்பட்டது.

இவரும் ஏனைய  இரு நண்பர்களும் ஆற்றின் மறுகரைக்கு செல்ல முற்பட்டிருந்தபோது, தோணி மறுகரைக்கு கொண்டுசெல்லப்பட்டிருந்தது.  இந்த நிலையில்,  ஆற்றினூடாக நீந்திச்சென்று,    மறுகரையிலுள்ள தோணியை எடுத்துவந்து நண்பர்களையும் ஏற்றிச்செல்லலாம் என்ற நோக்கில்  இவர் ஆற்றில் கால் வைத்தபோது,  முதலை கௌவியுள்ளதாக பின்னர் தெரியவந்துள்ளது.

கடந்த 4 மதங்களுக்குள் சந்தனமடு ஆற்றில் மூழ்கி மூவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .