2026 ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை

`உரியமுறையில் அனுமதிப் பெறாமையே நீர்துண்டிப்புக்கான காரணம்‘

Ilango Bharathy   / 2021 செப்டெம்பர் 21 , மு.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

நானுஒயா ஆரம்ப பிரிவு வைத்திய நிலையத்துக்கான குடிநீர் துண்டிக்கப்பட்டமைக்கு அங்குள்ள நிர்வாகத்தினரின் அசமந்த போக்கே காரணமென, நுவரெலியா பிரதேச சபை தவிசாளர் வேலு யோகராஜ் தெரிவித்தார்.

இது தொடர்பில் தெரிவித்த அவர், “குறித்த ஆரம்ப வைத்திய பிரிவு கட்டடமானது ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடன் உதவியுடன் அமைக்கப்பட்டதாகும்.அந்த கட்டடமானது எந்தவிதமான அனுமதியும் இன்றி, ஆரம்ப கட்ட வேலைகள் முன்னெடுக்கப்பட்ட பொழுது, அது தொடர்பாக உரிய வரைபடங்களை நுவரெலியா பிரதேச சபையில் சமர்ப்பித்து அனுமதியை பெற்றுக் கொள்ளுமாறு நாங்கள் கடிதம் மூலம் அறிவித்திருந்தோம்”.

”ஆனால் அவர்கள் நிர்மாண வேலைகளை ஆரம்பித்து, சிறிது காலத்தின் பின்பே அதற்கான
வரைபடத்தை எங்களிடம் சமர்ப்பித்தார்கள்.எனவே, அதற்கு ஒரு தண்டப்பணம் அறவிடுவது
பிரதேச சபையின் நடைமுறையாகும்.அதற்கான தண்டப்பணமாக 96000.00 ரூபாய் அறவிடுவதற்கு தீர்மானித்து அதனையும் கடிதம் மூலம் அறிவித்திருந்தோம்”.

“ஆனால் அவர்கள் அந்த பணத்தை இதுவரையில் கட்டவில்லை.எனவே, அந்த குறித்த
வைத்தியசாலை கட்டடத்துக்கு எங்களுடைய பிரதேச சபை ஊடாக சேவைகளை பெற்றுக்
கொடுக்க முடியாத காரணத்தினால் அதற்கான நீர் வசதி துண்டிக்கப்பட்டது. இது அரசாங்கத்தின் நடைமுறையாகும்”.

தனியாராக இருந்தாலும் அரசாங்க கட்டடமாக இருந்தாலும் குறித்த தொகை செலுத்த 
வேண்டியதும் அனுமதி பெற வேண்டியதும் கட்டாயமாகும். இதனை மீறியே அவர்கள்
செயற்பட்டுள்ளார்கள். அவர்கள் தண்டப் பணத்தை உடனடியாக செலுத்த நடவடிக்கை
எடுப்பார்களானால், அவர்களுக்கான நீர் வசதியை பெற்றுக் கொடுக்க முடியும்.

“நாங்களும் பிரதேச சபை என்ற வகையில் பொது மக்களுக்கு சேவை செய்வதற்காகவே இங்கு
இருக்கின்றோம்.எனவே சுகாதார துறையை சார்ந்தவர்களும் அதனை உணர்ந்து கொள்ள
வேண்டும்.இரண்டு தரப்பினரும் ஒத்துழைப்புடன் நடந்து கொண்டால் எந்தவிதமான
பிரச்சினையும் ஏற்படாது“.

ஆனால் ஒருசிலர் தன்னிச்சையான முடிவுகளை எடுத்து செயற்படுவதன் காரணமாகவே
இவ்வாறான தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றது.நீர் வசதி துண்டிக்கப்பட்டமைக்கு
இதுவே முக்கிய காரணம் எனவும் பிரதேச சபைத் தவிசாளர் வேலு யோகராஜ் மேலும்
தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X