2026 ஏப்ரல் 06, திங்கட்கிழமை

‘சுற்றாடல் பாதிப்புக்களை தடுக்க வேண்டும்’

Editorial   / 2017 ஜூலை 01 , மு.ப. 09:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரத்தினபுரி மாவட்டம் தற்போது காணப்படும் நிலையை மேலும் 25 வருடங்களுக்கு அப்பாலும் பேண வேண்டுமாயின் அங்கு நடைபெறும் சுற்றாடல் பாதிப்புக்களை உடனடியாக தடுக்கவேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

இரத்தினக்கல் கைத்தொழிலை மேம்படுத்தல் அவசியமானது என்றபோதிலும், தமது எதிர்கால சந்ததிகளும் இப்பிரதேசத்தில் வாழும் உரிமையை உறுதிசெய்து அங்கு நடைபெறும் சுற்றாடல் பாதிப்புக்களைத் தடுப்பதற்கான தமது பொறுப்புக்களை வர்த்தக சமூகத்தினரைப் போன்றே ஏனையோரும் நிறைவேற்ற வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இரத்தினபுரி மாகாணத்தின் பொது மருத்துவமனையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய கட்டடங்களைம் திறந்துவைக்கும் நிகழ்வில் நேற்றுப் பிற்பகல் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, ஜனாதிபதி மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்தார்.

இரத்தினபுரி மாவட்டத்தில் இடம்​பெற்ற மண்சரிவு மற்றும் வௌளப்பெருக்கு நிலைமைகள் தொடர்பாக தேசிய கட்டிடங்கள் ஆய்வு நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ள விடயங்களுள் அனுமதியற்ற முறையில் மேற்கொள்ளப்படும் இரத்தினக்கல் அகழ்வு காரணமாக ஏற்பட்டுள்ள சுற்றாடல் பாதிப்புக்களே முதன்மையான காரணமாகும் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

தற்போது நாட்டில் ஏற்படும் சில நிகழ்வுகள் தற்போது ஆட்சிபுரிபவர்களின் கிரக பலன்கள் காரணமாகவே ஏற்படுகின்றதென ஒரு சிலர் தெரிவிப்பதை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, காலநிலை மற்றும் வானிலை மாற்றங்களினால் பூகோள வெப்பமடைதல் காரணமாக ஏற்பட்டுள்ள மாற்றங்களை இன்று உலக நாடுகள் அனைத்துமே எதிர்நோக்க நேர்ந்துள்ளதுடன், சுற்றாடல் சவால்களை எம்மால் தடுக்க முடியாது என்பதுடன் இயற்கையின் மாற்றங்களுக்கு ஏற்ப நாமும் செயற்படவேண்டும் என்றும் தெரிவித்தார்.

இரத்தினபுரி மாகாணத்தின் பொது மருத்துவமனையில் 100 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய சிறுவர் வாட்டுத் தொகுதி, இரத்த வங்கி, குருதி சுத்திகரிப்புப் பிரிவு, மற்றும் X கதிர் பிரிவு என்பன ஜனாதிபதியால் திறந்துவைக்கப்பட்டன.

பிரதேச நன்கொடையாளர்கள் மற்றும் அமெரிக்க பிரஜையான லுவிஸ் எலனின் தனிப்பட்ட அன்பளிப்பில் இந்த புதிய கட்டடத்தொகுதிகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன்,  அமெரிக்க பிரஜையான லுவிஸ் எலனுக்கு  நினைவுப்பரிசொன்றும் ஜனாதிபதியால் வழங்கப்பட்டது.

நினைவுப்பலகையை திரைநீக்கம் செய்து சிறுவர் வாட்டுத்தொகுதி மற்றும் இரத்த வங்கி என்பவற்றைத் திறந்துவைத்த ஜனாதிபதி அவர்கள், புதிய சிறுவர் வாட்டுத்தொகுதியின் முதலாவது நோயாளியையும் பதிவுசெய்தார்.

சிவனொளிபாத மலை விகாரையின் விகாராதிபதி பெங்கமுவே தம்மதின்ன நாயக்க தேரர், வண. அக்கரெல்லே ஞானவங்ச தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினரும், ஏனைய சமய தலைவர்களும், அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, டபிளியு.டீ.ஜே. செனெவிரத்ன, தலதா அத்துகோரல, பிரதியமைச்சர் கருணாரத்ன பரனவிதான, சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத், நாடாளுமன்ற உறுப்பினர்களான பவித்ரா வன்னியாரச்சி, ஏ.ஏ. விஜேதுங்க ஆகியோரும், ஶ்ரீ தலதா மாளிகையின் தியவடன நிலமே நிலங்க தேல, மாகாண சுகாதார பணிப்பாளர் ஜயசுந்தர பண்டார, மருத்துவமனையின் பணிப்பாளர் எஸ்.ஜீ.எல். ரணவீர உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .