Editorial / 2026 மே 08 , மு.ப. 10:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

தெனியாய கல்வி வலயத்திற்குட்பட்ட பல பாடசாலைகளில், மாணவர்களிடையே இன்புளுவென்சா (Influenza) போன்ற ஒரு வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாகக் கூறப்படும் தகவலையடுத்து, அந்தப் பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக மாகாணக் கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக இப்பகுதியைச் சேர்ந்த பெருமளவிலான மாணவர்கள் காய்ச்சல் அறிகுறிகளுடன் தெனியாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக மாணவர்களிடையே நோய் பரவுவதைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தெனியாய கல்வி வலயத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளையும் இன்று (07) மற்றும் நாளை (08) ஆகிய இரு தினங்களுக்கு மூடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கல்வி வலயப் பணிப்பாளர் நிஷாகா ஹெட்டிகொட தெரிவித்தார்.
இந்த நோய் பரவல் காரணமாக மாணவர்களின் வருகை கணிசமாகக் குறைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இப்பகுதியிலுள்ள பாடசாலைகளின் சுகாதார நிலைமை குறித்து எழுந்துள்ள கவலைகளை அடுத்து, தென் மாகாண ஆளுநர் அலுவலகத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தென் மாகாண ஆளுநரின் தலைமையில் மே 6ஆம் திகதி நடைபெற்ற உயர்மட்டக் கலந்துரையாடலின் போது, பிராந்திய பாடசாலைகளின் சுகாதார நிலைமைகள் குறித்து ஆராயப்பட்டது. இதன்போது, சுகாதார அதிகாரிகள் நிலைமையைக் கண்காணிப்பதற்கும் தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் ஏதுவாக, இரண்டு நாட்களுக்கு கல்விச் செயற்பாடுகளை நிறுத்தி வைக்கத் தீர்மானிக்கப்பட்டது. இந்த உத்தரவு தென் மாகாணக் கல்விப் பணிப்பாளர் மற்றும் தெனியாய வலயக் கல்வி அலுவலகம் உள்ளிட்ட மாகாணக் கல்வி அதிகாரிகளுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
17 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
2 hours ago