Editorial / 2026 மே 17 , பி.ப. 01:03 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஹட்டன் டெலிகொம் நிறுவனத்திற்குச் சொந்தமான தொலைபேசி வடங்களை வெட்டி, தீயிட்டுக்கொளுத்தி, திருடிய குற்றச்சாட்டின் கீழ் இரு சந்தேகநபர்கள் ஹட்டன் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நோர்வூட், மஸ்கெலியா மற்றும் காசல்ரீ ஆகிய பகுதிகளிலேயே இத்திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
இரவு வேளைகளில் நிலத்தடித் தொலைபேசி வடங்களை வெட்டி, அவற்றிலிருந்து செம்பைப் (Copper) பிரித்தெடுத்து விற்பனை செய்யும் பாரிய மோசடி ஒன்று இடம்பெற்று வருவதாக பொலிஸாருக்குத் தகவல் கிடைத்தது. இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே, சனிக்கிழமை (16) அன்று இக்கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஹட்டனிலிருந்து நோர்வூட், மஸ்கெலியா மற்றும் காசல்ரீ ஆகிய பகுதிகளிலுள்ள வாடிக்கையாளர்களுக்குத் தொலைபேசி இணைப்புகளை வழங்குவதற்காகப் பொருத்தப்பட்டிருந்த நீண்ட தொலைபேசி வடங்கள், திட்டமிட்ட கும்பல் ஒன்றினால் வெட்டி அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாக ஹட்டன் டெலிகொம் நிறுவனம் இதற்கு முன்னர் ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தது.
இதனைத் தொடர்ந்து, ஹட்டன் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் வீரசேகரவுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் பேரில், ஹட்டன் தலைமையகப் பிரதான பொலிஸ் பரிசோதகர் டபிள்யூ.ஆர்.ஏ.டி. சுகததாசவின் மேற்பார்வையின் கீழ், ஹட்டன் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நார்வூட் 'அப்காட்' பகுதியிலுள்ள சந்தேகநபர் ஒருவரின் வீட்டைச் சோதனையிட்டனர்.
இச்சோதனை நடவடிக்கையின் போது, அந்த வீட்டிற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 40 இலட்சம் (Rs. 4 Million) ரூபாய் பெறுமதியான வெட்டப்பட்ட தொலைபேசி வடங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 51 மற்றும் 28 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் திருடப்பட்ட வடங்களை உருக்கி, அவற்றிலிருந்து பெறப்படும் செம்பை ஒரு கிலோகிராம் சுமார் 2,500 ரூபாய் என்ற விலைக்கு விற்பனை செய்து வந்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
32 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago