2026 மே 09, சனிக்கிழமை

மலையகத்துக்கு விடிவு

Editorial   / 2019 நவம்பர் 01 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில், மலையக மறுமலர்ச்சிக்கான, பல்வேறு நலத்திட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

வசதி வாய்ப்புகளில் பின்தங்கியிருக்கும் மலையக மக்களின் பிரதானப் பிரச்சினையான காணிப் பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுக்கப் போவதாக, சஜித் பிரேமதாஸ  தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் உறுதியளித்துள்ளார்.

அத்துடன், தொழிலாளர்களுக்கு நியாயமான, சமமான சம்பளம் உறுதி செய்யப்படுமெனவும் அவர் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவித்துள்ளார்.

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவால், நேற்று(31) வெளியிடப்பட்டுள்ள 94 பக்கங்களைக் கொண்ட அவரது தேர்தல் விஞ்ஞாபனத்திலேயே, மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு, வெறும் 7 பேர்ச்  நிலத்தை வைத்திருக்கவும் இச்செயற்பாட்டில் உள்ள நிர்வாகத்தடைகள், சிக்கல்கள் நீக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தங்குமிடமில்லாத ஒவ்வொரு குடும்பத்துக்கும், ஒரு தங்குமிடம் வழங்கப்படுமெனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தோட்டத் தொழிலாளர்களுக்கு, ஒரு நிலையான வருமானத்தைப் பெற்றுக்கொடுப்பதற்காக, அவுட்-க்ரோவர் (வெளியால் உற்பத்திமுறை) திட்டம்  முன்னெடுக்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான, சமமான சம்பளம் உறுதி செய்யப்படுமெனவும், நாட்டின் ஏனைய பகுதிகளில் முன்னெடுக்கப்படுவதைப்போன்று, பெருந்தோட்டங்களிலும் பொதுசுகாதார சேவைகள் முன்னெடுக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தோட்டப் பகுதிகளில், 10 தேசியப் பாடசாலைகளையும், உயர் கல்வியை மேம்படுத்த பல்கலைக்கழகமொன்றும் திறக்கப்படும் என்றும் இளைஞர்களுக்காக தொழிற்பயிற்சி நிறுவனங்கள் உருவாக்கப்படும் என்றும், நாடுமுழுவதிலும் உள்ள கல்வி, பயிற்சி நிறுவனங்களில் மலையகப் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டின் ஏனைய பிரதேச சுகாதார சேவைக்கு ஒப்பான தரமான சுகாதார சேவையை தோட்டப்புறங்களுக்கு பெற்றுக்கொடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“மலையக தமிழ் விவசாயி”களாக, நிலையான வருமானம் பெற்றுக்கொள்வதற்காக, தனியார்/அரச பெருந்தோட்டங்கள் மீள் கட்டமைப்புச் செய்யப்படும் என்றும் மலையக விவசாயிகளிடமிருந்து விளைபொருள்களை விலைக்கு வாங்கி, தோட்ட நிறுவனங்களும், மலையக விவசாயிகளும் பங்காளர்களாகும் வெளிவாரி தொழில் முறைமை உத்தரவாதம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .