2025 ஜூன் 25, புதன்கிழமை

மலையக மக்கள் கிள்ளு கீரைகள் அல்ல

Sudharshini   / 2015 செப்டெம்பர் 13 , பி.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.ஷங்கீதன்

'மலையக மக்கள் இந்த நாட்டில் வாழும் கிள்ளு கீரைகள் அல்லர். அவர்கள் கத்தியால் கவ்வாத்தும் வெட்டுவார்கள், தேவைப்பட்டால் எதிராளியையும் வெட்டுவார்கள்' என கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

'மறைந்த தலைவர் அமரர் சந்திரசேகரன் ஒரு குறிக்கோளுடனும் சாத்வீக போராட்ட குணத்துடனேயே எம்மை வளர்த்தெடுத்திருக்கின்றார் என்பதை நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு நினைவுப்படுத்த விரும்புகின்றேன்;.

மலையக மக்களைக் கொச்சைப்படுத்தி தனியார் தொலைக்காட்சியில் கருத்துக்களை வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவை, வன்மையாக கண்டிக்கிறேன்' எனவும் அவர் கூறினார்.  

அண்மையில் தனியார் தொலைக்காட்சியில் இடம்பெற்ற நேரடி நிகழ்ச்சி ஒன்றில், நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, மலையகத் தொழிலாளர்கள் இலங்கைக்கு தொழிலுக்காகவே கொண்டுவரப்பட்டார்கள். ஆனால், பிரஜாவுரிமை பெற்று இந்த நாட்டின் பிரஜைகளாக மாறிவிட்டார்கள்.

எனவே, இந்தியாவுடன் செய்துகொள்ளப்படவுள்ள சீபா வர்த்தக உடன்படிக்கையின் மூலம், இந்த நாடு இந்தியாவின் ஒரு கொலனியாக மாறிவிடும் என்று தெரிவித்திருந்தார்.

இக்கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று (13) வெளியிட்டுள்ள அறிக்கையிலே கல்வி இராஜாங்க அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவ்வறிக்கiயில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'இந்த நாட்டில், 200 வருடகால வரலாற்றை கொண்டவர்கள் எமது மலையக இந்திய வம்சாவளி தமிழர்கள். எமது மூதாதையர்களும் இன்றைய தொழிலாளர்களும் நாட்டின் பொருளாதாரத்தில் முழுமையான பங்களிப்பை செலுத்தியவர்கள். இந்தத் தோட்ட தொழிலாளர்ளே, ஒரு காலத்தில் அந்நிய செலவாணியை ஈட்டிக் கொடுப்பதில் முக்கிய பங்காளிகளாக இருந்தனர்.  

தமது முழுமையான உழைப்பை இரத்தமாக சிந்தி, இந்த நாட்டின் முன்னேற்றத்துக்கு பங்களிப்புச் செய்த ஒரு சமூகத்தைப் பார்த்து கொச்சைப்படுத்தும் வார்த்தைகளைப் பயன்படுத்திய விமல் வீரவன்சவை, நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

அவருக்கு ஒரு விடயத்தைத் தெளிவுபடுத்த வேண்டும். கடந்த ஜனவரி மாதம் இந்த தொழிலாளர்கள் எடுத்த முடிவின் காரணமாகவே மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. அதனை அவர் நன்கு புரிந்துக்கொள்ள வேண்டும்.

மலையக மக்களின் ஆதரவு இன்றி, ஆட்சி அமைக்க முடியாது என்பதை அவர் தெரிந்துக் கொள்ள வேண்டும். நானும் தோட்டத்தில் பிறந்து வளர்;ந்தவன் என்ற வகையிலும் எமது சமூகத்தைப் பிரதிநிதித்துவம் செய்பவன் என்றவகையிலும் எமது பெருந்தோட்ட மக்களைக் கொச்சைப்படுத்துவதைப் பார்த்துக்கொண்டு நாம் மௌனமாக இருக்க முடியாது.

அவர்களும் இந்த நாட்டில் அனைத்து பிரஜைகளைப் போல அனைத்து உரிமைகளுடன் வாழ வேண்டும் என்பதற்காகவே நாங்கள் இன்று சேவை செய்து வருகின்றோம். எனவே, எமது மக்களை ஏளனப்படுத்த யாரும் முயற்சி செய்தால் அதற்குத் தகுந்த பதிலடி கொடுக்க நாங்கள் என்றும் பின்நிற்க மாட்டோம்' என்றார்.

'மலையக மக்கள் என்பவர்கள் தனியே தோட்டத் தொழிலாளர்கள் மட்டுமல்ல. இந்த நாட்டின் அனைத்து பகுதிகளிலும் அவர்கள் பரந்து வாழ்கின்றார்கள். அவர்கள் வர்த்தகர்களாகவும் கல்விமான்களாகவும் வெளிநாட்டு தூதுவர்களாகவும் இருக்கின்றார்கள். முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா, எமது சமூகத்தை கொச்சைப்படுத்தினார். ஆனால், இன்று அவர் அரசியலில் இருந்து ஓரம் கட்டப்பட்டுள்ளார்.

எனவே, நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவும் மிக விரைவில் இந்த அரசியல் களத்தில் இருந்து மக்களால் ஓரம் கட்டப்படுவார். இனவாத அரசியல் இனிமேலும் இந்த நாட்டில் எடுபடாது என்பதை நடந்து முடிந்த இரண்டு தேர்தலிலும் மக்கள் தெளிவாக வாக்குகளின் மூலம் நிரூபித்துள்ளார்கள்.

இனவாத கருத்துகள் காரணமாகவே மஹிந்த ஆட்சி முற்றுப்பெற்றது. எனவே, இனிமேலும் இனவாதம் பேசாமல் நாட்டின் நன்மைக் கருதி செயற்பட முன்வர வேண்டும்' என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .