2025 ஜூன் 26, வியாழக்கிழமை

முகப்புத்தகத்தில் போலி முகம்: காதலியாக நடித்து பணம் கறப்பு

Gavitha   / 2015 செப்டெம்பர் 22 , மு.ப. 01:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

முகப்புத்தகத்தில் போலி கணக்கொன்றை ஆரம்பித்து, பாடசாலை மாணவனொருவனிடமிருந்து 45,000 ரூபாயை மோசடி செய்த இளைஞனை கினிகத்தேனை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கண்டி, உடபுஸ்ஸல்லாவையைச் சேர்ந்த இளைஞனொருவன் தன்னை பெண் என அடையாளப்படுத்திக்கொண்டு முகப்புத்தகத்தில் போலிக் கணக்கொன்றை ஆரம்பித்துள்ளதுடன் அக்கணக்கினூடாக ஹட்டனைச் சேர்ந்த பாடசாலை  மாணவனொருவனிடம்  தொடர்பை ஏற்படுத்தியுள்ளான்.

பெண்ணொருவர் தன்னுடன் நட்புபாராட்டுவதாக நினைத்த மாணவன் நாளடைவில் அவர், விரித்த காதல் வலையில் விழுந்துள்ளதுடன் தனது போலி காதலிக்காக 45,000 ரூபாயையும் வங்கியில் வைப்பிலிட்டுள்ளான்.

இவ்விருவருக்குமான காதல் ஆறுமாதம் தொடர்ந்துள்ளது. இந்நிலையில், தனது காதலி மீது ஏற்பட்ட சந்தேகத்தை போக்குவதற்காக மேற்படி மாணவன் மற்றுமொரு நண்பனிடம் இதுகுறித்து கூறியுள்ளதுடன் இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்து பார்க்குமாறு கெஞ்சியுள்ளான்.

நண்பனின் தேடுதலின்போது, பெண்ணை போன்று நடித்த இளைஞனின் உண்மையான கணக்கிலக்கம் தெரியவந்துள்ளதுடன் இது பணத்தை கறப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட சதிநாடகம் என்பதும் தெரியவந்துள்ளது.

உண்மையை உணர்ந்துகொண்ட மேற்படி மாணவன், தன்னை சுதாகரித்துக்கொண்டதுடன் அவ்விளைஞனின் உண்மையான முகப்புத்தகத்தின் இலக்கத்துக்கு தொடர்பை ஏற்படுத்தி தன்னை ஒரு பெண்ணாக அடையாளப்படுத்தியுள்ளார்.

இதன்போது, மேற்படி இளைஞன் தன்னிடம் பெண் ஒருவர் தொடர்பை ஏற்படுத்தியுள்ளதாக நினைத்துகொண்டு மீண்டும் பணம் கறக்கும் நாடகத்தை அரங்கேற்றியுள்ளார். தனக்கு அவசரமாக 5,000 ரூபாய் தேவைப்படுவதாக மாணவனிடம் கூறிய அவ்விளைஞன் புதிய வங்கிக் கணக்கிலக்கத்தை மாணவனுக்கு அனுப்பியுள்ளான்.

அதற்கு மாணவன் தனக்கு வங்கியில் வைப்பிலிட முடியாது என்றும் கினிக்தேனைக்கு சனிக்கிழமை வந்தால் தனது நண்பருக்கூடாக பணத்தை பெற்றுகொள்ள முடியும் என்றும் கூறியுள்ளார். இதற்கு உடன்பட்ட இளைஞன், குறித்த நாளன்று காலை 10 மணியளவில் கினிகத்தேனை பகுதிக்கு வந்துள்ளார்.

இது தொடர்பில்  பொலிஸாருக்கு ஏற்கெனவே தகவல் வழங்கிய மாணவன், பொலிஸாரின் உதவியுடன் கினிக்தேனை பகுதியில் வைத்து சனிக்கிழமை(18) இளைஞனை கையுமெய்யுமாக பிடித்துகொண்டான்.

அவ்விளைஞனை கைதுசெய்த பொலிஸார் எச்சரித்து விடுதலை செய்ததுடன் பாதிக்கப்பட்ட மாணவனிடம் பணத்தை மீளசெலுத்துமாறும் பணித்துள்ளனர். இதேவேளை, சமூக ஊடகங்கள் தொடர்பில் பாடசாலை மாணவர்கள் உட்பட அனைவரும் அவதானத்துடன் செயற்படுமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .