2025 ஜூன் 25, புதன்கிழமை

வறுமைக்காக சிறுநீரகத்தைக் கொடுத்து ஏமாந்த இளைஞன் நிர்க்கதியில்

Kogilavani   / 2015 செப்டெம்பர் 11 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஞ்சித் ராஜபக்ஷ

ஐந்து இலட்சம் ரூபாய் பணத்தை தருவதாகக் கூறி  சிறுநீரகத்தை பெற்றுக்கொண்ட நபர், தன்னை ஏமாற்றிவிட்டு நாட்டைவிட்டு வெளியேறியதாக  ஹட்டன் எபோஸ்ட்லி தோட்டத்தைச் சேர்ந்த ஜோன்ஸன் (வயது 29) என்ற இளைஞன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பொருளாதார நெருக்கடி காரணமாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் நோயாளியை கவனித்துக்கொள்ளும் தற்காலிக பணியில் இவ் இளைஞன் ஈடுபட்டு வந்துள்ளான்.

கடந்த வருடம் செப்டெம்பர் மாதம், சிறுநீரகம் தேவைப்படுவதாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 41 வயதுடைய ஒருவர், மேற்படி இளைஞனிடம் கேட்டுள்ளதுடன் அதற்கு பதிலாக 5 இலட்சம் ரூபாயை தருவதாகக் கூற, இவ் இளைஞனும் அதற்கு உடன்பட்டுள்ளார்.
 
குறித்த இளைஞனை கொழும்பு – வெள்ளவத்தையில் வாடகை வீடொன்றில் தங்க வைத்த மேற்படி நபர், பல்வேறு மருத்துவ பரிசோதனைகளுக்குப் பின்னர் சத்திர சிகிச்சைக்கூடாக சிறுநீரகத்தை பெற்றுக் கொண்டுள்ளார்.

அவ் இளைஞன் தனது சொந்த ஊரான ஹட்டனுக்கு திரும்புதற்காக  வாகனமொன்றை தயார்படுத்திக் கொடுத்துள்ள குறித்த நபர், இளைஞனின் வங்கிக் கணக்கையும் தொலைபேசி இலக்கத்தையும் பெற்றுக் கொண்டுள்ளார்.

வீட்டுக்குச் சென்றவுடன் வங்கிக் கணக்குக்கு 5 இலட்சம் ரூபாய் பணத்தை வைப்பிலிடுவதாக குறித்த நபர் உறுதியளித்ததற்கு இணங்க, அந்த இளைஞனும் வீடு திரும்பியுள்ளார்.

வீடு திரும்பிய பின்னர், வங்கிக் கணக்கை சோதித்தப்போது அதில் எந்த பணமும் வைப்பிலிடாததை அறிந்தவுடன் குறித்த நபரது தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்புகொண்டுள்ளார். எனினும் அந்த இலக்கம் செயற்பாடதிருந்துள்ளது.

அதனையடுத்து குறித்த நபர் தங்கியிருந்த இடத்துக்குச் சென்று விசாரித்தபோது, அவர் வெளிநாடு சென்றுவிட்டதாக தெரியவந்துள்ளது. எனினும் தங்கியிருந்த இடத்தின் உரிமையாளரிடம் அவ்இளைஞன் நீதிகேட்டதால் உரிமையாளர் இளைஞனை திட்டி அனுப்பியுள்ளார்.

சிறுநீரகம் இல்லாததினால் பாரமான எந்த தொழிலிலும் ஈடுபட முடியாதால் தான் அசாதாரண நிலைக்கு உள்ளாகியுள்ளதாக அவ்விளைஞன் கவலை தெரிவித்துள்ளான்.

பெற்றோரை இழந்த இவ் இளைஞனுக்கு சகோதிரிகள் உள்ளபோதும் அவர்கள் திருமணம் முடித்து சென்றுவிட்டதால் நிர்க்கதிக்கு உள்ளாகியுள்ளான். ஆனால், இவ்விடயம்தொடர்பில் இதுவரை பொலிஸிலும் முறைப்பாடு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
சிறுநீரகம் கொடுத்துவிட்டு ஏமாறியதால் பிரதேசத்திலுள்ள ஏனையவர்கள் தன்னை கேலி செய்வதாக இளைஞன் கவலை தெரிவித்துள்ளான்.


 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .