2025 ஜூன் 30, திங்கட்கிழமை

வீதியை புனரமைத்து தருமாறு கோரி ஆர்ப்பாட்டம்

Editorial   / 2017 நவம்பர் 25 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கணேசன்,எஸ்.சதீஸ்

அம்பகமுவ பிரதேச செயலாளர் பகுதிக்குட்பட்ட போட்றி, எலிபடை, அயரபி தோட்ட மக்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

 நோர்வூட் அயரபி சந்தியிலிருந்து எலிபடை தோட்டப்பகுதிக்கு செல்லும் சுமார் 5 கிலோமீற்றர் பிரதான வீதி பல வருடகாலமாக பாவனைக்குதவாமல் குன்றும் குழியுமாக காணப்படுவதால் இப்பிரதான வீதியின் ஊடாக பயணிக்கும் இத்தோட்ட பிரிவைச் சேர்ந்த 1,000 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் பெரும் அசௌகரியத்துக்கு உள்ளாகியுள்ளதை வெளிக்கொணர்ந்து இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

 500க்கும் மேற்பட்டவர்கள் இந்தக் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியில் நோர்வூட் அயரபி சந்தியில் முன்னெடுத்தனர்.

 இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் நிரந்தர வீதியே எமது கோரிக்கை, தெற்குக்கு அதிவேகம், எமக்கு ஆமை வேகம், போன்ற கோசங்களை எழுப்பியதுடன் வாசகங்கள் தாங்கிய பதாதைகளையும் தாங்கியிருந்தனர்.

பல வருடகாலமாக இந்த வீதியை சீர்திருத்தி தருமாறு இப்பகுதியை சேர்ந்த அரசியல்வாதிகள் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு வந்தும் ஒரு தீர்வைப் பெற்றுத்தராத நிலையில் இந்தக் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

 இப்பிரதேசங்களில் தொழில்புரிபவர்களும் பாரிய அசௌகரியங்களுக்களாகி வருகின்றமையை ஆர்ப்பாட்டத்தின் போது மக்கள் சுட்டிக்காட்டினர்.

 இந்த பிரதான வீதி பாவனைக்குதவாத நிலையில் காணப்படுவதனால் தத்தமது வீடுகளுக்கு பிரதான நகர் பகுதியிலிருந்து பொருட்களை வாகனத்தில் கொண்டு வருவதற்கு சிரமமாக உள்ளதாகவும் ஆர்ப்பாட்டகாரர்கள் தெரிவித்தனர்.

 எனவே, தோட்ட நிர்வாகமும் இது தொடர்பில் கவனத்திற்கொள்ளாத பட்சத்தில், நம்பி வாக்களித்த அரசியல்வாதிகள் இத்தோட்டத்தின் நலனில் அக்கறை கொண்டு காலம் தாழ்த்தப்படாத நிலையில் குறித்த வீதியை செப்பனிட்டு தருமாறு ஆர்ப்பாட்டகாரர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X