2026 ஏப்ரல் 27, திங்கட்கிழமை

5 இலட்சத்தக்கு ஆசைப்பட்டு சிறுநீரகத்தை பறிகொடுத்த இளைஞன்

Sudharshini   / 2015 செப்டெம்பர் 13 , பி.ப. 07:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ

ஐந்து இலட்சம் ரூபாய் பணம் தருவதாகக் கூறி தனது சிறுநீரகத்தைப் பெற்றுக் கொண்டு ஏமாற்றிய நபர், வெளிநாட்டுக்குச் சென்றுள்ளதாக ஹட்டன் எபோஸ்ட்லி தோட்டத்தைச் சேர்ந்த ஜோன்ஸன் என்ற இளைஞன் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் குறித்து மேலும் தெரியவருவதாவது, பொருளாதார நெருக்கடி காரணமாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் நோயாளியை கவனித்துக் கொள்ளும் தற்காலிக வேலையை ஜோன்ஸன் என்ற இளைஞன் செய்துகொண்டிருந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் சிறுநீரகம் தேவைப்படுவதாக, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 41 வயதுடைய நபர் மேற்படி இளைஞனிடம் கேட்டதுடன் அதற்கு 5 இலட்சம் ரூபாய் பணம் தருவாகவும் தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடி காரணமாக குறித்த இளைஞன் அதற்குச் சம்மதம் தெரிவித்ததையடுத்து, அவ்விளைஞனை கொழும்பு - வெள்ளவத்தை பிரதேசத்தில் வாடகைக்கு வீடொன்றை எடுத்து சிறுநீரகம் தேவைப்படுவதாக தெரிவித்த நபர் தங்க வைத்துள்ளார். இதன்பின்னர், பல்வேறு மருத்துவ பரிசோதனைகளுக்குப் பின்னர், சிறுநீரகத்தை அந்த நபர் பெற்றுக் கொண்டுள்ளார்.

இதனையடுத்து, இளைஞன் வீட்டுக்குச் செல்வதற்கு வாகனமொன்றை தயார்ப்படுத்திக் கொடுத்துள்ள நபர், இளைஞனின் வங்கிக் கணக்கையும்  அலைபேசி இலக்கத்தையும் பெற்றுக் கொண்டுள்ளார்.

வீட்டுக்குச் சென்றவுடன் வங்கிக் கணக்குக்கு 5 இலட்சம் ரூபாய் பணத்தை வைப்பிலிடுவதாகவும் அந்நபர் உறுதியளித்துள்ளார்.

சில தினங்களுக்கு பிறகு தனது வங்கிக்கணக்கைப் பார்த்த போது, பணம் வைப்பிலிடப்படாததை அறிந்தவுடன், அந்நபரது அலைபேசி இலக்கத்துக்கு  தொடர்புக்கொண்டுள்ளார். எனினும் அந்த இலக்கத்தைத் தொடர்புகொள்ள முடியவில்லை.

அதனையடுத்து, குறித்த நபர் தங்கியிருந்த இடத்துக்கு சென்று விசாரித்தபோது, அவர் வெளிநாடு சென்றுவிட்டதாக கூறியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட இளைஞன் இது தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யவில்லை என்றும் திடீரென்று ஏற்பட்ட சுகயீனம் காரணமாக தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .