2026 ஏப்ரல் 26, ஞாயிற்றுக்கிழமை

"வயிற்றில் அடிப்பதற்கு இடமளிக்கமாட்டேன்"

Kogilavani   / 2016 ஒக்டோபர் 06 , மு.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.ஷங்கீதன்

'பெருந்தோட்ட கம்பனிகள், தோட்டத் தொழிலாளர்களின்  வயிற்றில் அடிப்பது போதாது என நினைத்து, தொழிலாளர்களின் பிள்ளைகளின் கல்வியிலும் பாதிப்பை ஏற்படுத்த முனைகின்றனர். இதற்கு எக்காரணம் கொண்டும், நான் இடமளிக்கமாட்டேன்' என இராஜாங்க கல்வி அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

'தோட்டக் கம்பனிகள், பாடசாலை அபிவிருத்திக்கு காணிகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனவும் அவர் இதனை கூறினார்.

தேசிய கல்வியியல் கல்லூரிகளில் கல்விப் பயின்ற டிப்ளோமா பட்டதாரிகள் 3,225 பேருக்கான நியமனங்கள் வழங்கும் நிகழ்வு, செவ்வாய்க்கிழமை கொழும்பில் நடைபெற்றது.  இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இங்கு தொடர்ந்துரைத்த அவர்,

'இன்று இந்த அரசாங்கம் கல்விக்காக பெருந்தொகை நிதியை ஒதுக்கிட்டு வருகின்றது. 'அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை' எனும் வேலைத்திட்டத்தின் கீழ், பாரிய அபிவிருத்திகளை முன்னெடுத்து வருகின்றது.

இந்த அபிவிருத்திக்கு குறுக்கீடு செய்யும் வகையில், மலையக பகுதிகளிலுள்ள தோட்ட நிர்வாகங்கள் செயற்பட்டு வருகின்றன. நாங்கள் பெருந்தோட்ட பகுதிகளில் பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்காக புதிய கட்டடங்களை அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளோம்.
ஆனால், தோட்ட நிர்வாகங்கள் எமக்கு கட்டடங்களை அமைப்பதற்கான காணிகளை பெற்றுக்கொடுப்பதில் அசமந்த போக்கை கடைபிடித்து வருகின்றன.

பெருந்தோட்ட நிர்வாகங்கள் திட்டமிட்ட அடிப்படையில் இதனை முன்னெடுத்து வருகின்றதா? என்ற ஒரு சந்தேகமும் எழுகின்றது. காரணம் பெருந்தோட்ட பகுதிகளில் இருக்கின்ற இளைஞர்,யுவதிகள் கல்விப் பயின்று வேறு தொழில்களுக்காக சென்றுவிட்டால் தோட்ட தொழிலுக்காக அவர்கள் வர மாட்டார்கள்.

எனவே, அவர்களை அடிமைகளாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக பாடசாலை அபிவிருத்திக்கு இவர்கள் தடையாக இருப்பதாகவே தோன்றுகின்றது.

எனவே, தோட்ட நிர்வாகங்கள் பாடசாலை அபிவிருத்திக்கு காணிகளை வழங்க தொடர்ந்து மறுத்து வருமாக இருந்தால் அவர்களுக்கு எதிராக நீதிமன்றம் செல்ல வேண்டிய நிலை ஏற்படும். அதற்கும் நான் தயாராகவே இருக்கின்றேன். தோட்ட நிர்வாகங்களின் இவ்வாறான செயற்பாடுகள் ஒருவகையில் மனித உரிமை மீறலாகும்.

எங்களுடைய மக்களை அடிமைகளாக தொடர்ந்தும் தோட்ட நிர்வாகங்கள் வைத்தக்கொள்ள திட்டமிடுகின்றதா?அதற்கு ஒருபோதும் நான் உடந்தையாக இருக்க மாட்டேன்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .