2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

உடபுசல்லாவையில் தீயினால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 16 , மு.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

உடபுசல்லாவை றொக்லெண்ட் தோட்டத்தில் தீ விபத்தினால் பாதிக்கப்பட்டுள்ள 15 குடும்பங்களைச் சேர்ந்த 78 பேர் சூரியகாஹ பத்தன சிங்கள பாடசாலையில் தொடர்ந்து தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் இவர்களுக்கான உடுதுணிகள் மற்றும் உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும்  நுவரெலியா மாவட்டச் செயலாளர் டி.பி.ஜி.குமாரஸ்ரீ தெரிவித்தார்.

அத்துடன், மின்சாரவொழுக்கின் காரணமான பாதிப்படைந்துள்ள உடபுசல்லாவை றொக்லெண்ட் தோட்டத் தொழிலாளர்களுக்கு புதிய வீடுகளைக் கட்டிக்கொடுப்பதற்கு தோட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென உரிய தரப்பினரின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளதாகவும் நுவரெலியா மாவட்டச் செயலாளர் டி.பி.ஜி .குமாரஸ்ரீ மேலும் தெரிவித்தார்.

உடப்புசலாவை டெல்மார், றொக்லண்ட் டிவிஷனில் கடந்த சனிக்கிழமை மாலை 3.10 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் இந்தத் தோட்டத்திலுள்ள முதலாம் இலக்க லயன் குடியிருப்பு முற்றாக எரிந்து நாசமாகியதில் 15 வீடுகள் பாதிப்படைந்தன. இந்த வீடுகளிலிருந்த அனைத்து உடைமைகளும் தீக்கிரையாகின. எனினும், எவருக்கும் காயங்களோ உயிர் சேதமோ ஏற்படவில்லை. பாதிக்கப்பட்ட மக்கள் சூரியகாஹ பத்தன சிங்கள பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தோட்ட நிர்வாகம் சில உடனடி உதவிகளை வழங்கியது.

இந்நிலையில், சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு உடனடியாக விஜயம் செய்த வலப்பனை பிரதேசசபையின் புதிய ஜனநாயக மார்க்ஸிய லெனினிஸக் கட்சியின் உறுப்பினர் பன்னீர் செல்வம் பாதிப்புக்களை அவதானித்து விட்டு பாதிக்கபட்ட குடும்பத்தினருக்கு வலப்பனை பிரதேசசபையினால் உதவக்கூடிய உதவிகளை வழங்குமாறு இந்தச் சபையின் தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X