2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

நல்லாட்சியில் விவசாயிகளின் அவல நிலையை போக்க நடவடிக்கை எடுப்போம்: இராதா

Sudharshini   / 2015 ஓகஸ்ட் 11 , பி.ப. 01:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

- டி.ஷங்கீதன்

விவசாயிகளின் அவல நிலையை எதிர்வரும் நல்லாட்சியின்போது மாற்றியமைப்போம்' என ஐக்கிய தேசிய முண்ணனியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

உலகளாவிய ரீதியில் புதிய தொழில்நுட்பத்தின் உதவியுடன் விவசாயம்  கௌரவமான முறையில் முன்னெடுக்கப்படுகின்றது. மேலும், அந்நாடுகள் விவசாயிகளுக்கு நல்ல கௌரவத்தையும் வழங்குகின்றது. ஆனால், இலங்கையில் விவசாயிகள் என்றால் படிக்காதவர்கள் ஒன்றும் தெரியாதவர்கள் என்ற நிலையே காணப்படுகின்றது. அந்நிலையை எமது நல்லாட்சியின் ஊடாக மாற்றியமைப்போம்' என்றும் அவர் கூறினார்.

விவசாயத்தில் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதன் மூலமே எமது நுவரெலியா மாவட்ட விவசாயிகளைப் பாதுகாத்துக்கொள்ள முடியும். எமது நாட்டின் தற்போதைய ஜனாதிபதி ஒரு விவசாய குடும்பத்தை பின்புலமாகக் கொண்டு வளர்ந்தவர். அவருக்கு விவசாயிகளின் கஷ்ட நஷ்டங்கள் நன்கு புரியும்.

கடந்த மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் விவசாயத்துறை தொடர்பாக உரிய திட்டமிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளாததன் காரணமாக, பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கினார்கள். குறிப்பாக விவசாயத்தில் ஈடுபடுபவர்களின் காணி, வீடு, தங்க ஆபரணங்கள் என்பன பல அரச தனியார் வங்கிகளில் அடகு வைக்கப்பட்டு ஏலத்தில் விடப்பட்டன.

ஆனால், ஜனவரி 8க்கு  பின்பு எமது விவசாயிகளின் விளைச்சலுக்கு நல்ல விலை கிடைத்துள்ளது. இன்று விவசாயத்தில் நுவரெலியா, ஊவா உட்பட பல மாகாணங்களில் உள்ளவர்களும் நன்மை அடைந்து வருகின்றார்கள்.

எமது மாவட்டத்தில் நன்கு படித்த  இளைஞர், யுவதிகள் விவசாயத்தில் ஈடுப்பட்டு  இலாபத்தை ஈட்டி வருகின்றார்கள். இந்த விவசாயத் துறையை இன்னும் கௌரவமான துறையாக மாற்றி விவசாயிகளுக்கு உரிய அந்தஸ்த்தை பெற்றுக்கொடுக்க வேண்டுமாயின் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதன் மூலமே அது சாத்தியமாகும்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்காலத்தில் ஹம்பாந்தோட்டை, மத்தலையில் அமைந்துள்ள விமான நிலையத்தின் மூலம் வெளிநாடுகளுக்கு எமது விவசாய பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான ஒரு திட்டத்தை வகுத்து வருகின்றார்.

இதன்மூலம் எமது விவசாயிகளின் உற்பத்திகளுக்கு நல்ல சந்தை வாய்ப்பை பெற்றுக்கொடுக்க முடியும். எமது விவசாயிகளை நட்டம் ஏற்படுவதிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும்' எனவும் அவர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .