Yuganthini / 2017 ஜூன் 20 , பி.ப. 09:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மொஹொமட் ஆஸிக்
மத்திய மாகாணத்தில் மீண்டும் டெங்கு காய்ச்சல், மிக வேகமாக பரவி வருவதாக தெரிவித்த மத்திய மாகாண சுகாதாரப் பணிப்பாளர் வைத்தியர் திருமதி சாந்தி சமரசிங்க, இம்மாகாணத்தில் இதுவரை 3,538 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன், இவர்களில் ஏழு பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கூறிய அவர்,
“கடந்த மாதங்களில், மத்திய மாகாணத்தில் டெங்கு காய்ச்சல் பரவும் வீதம் குறைந்திருந்த போதும் தற்போது தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக, டெங்கு நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்துள்ளது.
கண்டி மாநகர சபைப்பிரிவு, மாத்தளை மாநகர சபைப் பிரிவுகளில் டெங்கு நோய் வேகமாக பரவி வருகின்றது, அதனைத் தவிர, மேலும் சில சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளும் டெங்கு காய்ச்சல் மிக வேகமாக பரவும் பகுதிகளாக இனங்காணப்பட்டுள்ளன.
கண்டி மாவட்டத்தில், 2,598 நோயாளர்களும் மாத்தளை மாவட்டத்தில் 703 டெங்கு நோயாளர்களும், நுவரெலியா மாவட்டத்தில் 237 நோயாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர். இவர்களில் ஏழு பேர், இதுவரை உயிரிழந்துள்ளனர்.
கண்டி மாவட்டத்தில் கடந்த மே மாதம் மட்டும் 861 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடள் மாத்தளை மாவட்டத்தில் 133 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.
டெங்கு நுளம்பு பரவும் இடங்களை அழித்து, டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கு அரசதரப்பினரின் உதவி கிடைத்தபோதும், பொதுமக்கள் இது தொடர்பில் அக்கறை செலுத்தாமல் உள்ளனர்.
டெங்கு நுளம்பின் பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு, பொதுமக்களின் அக்கறையின்மை, தடையாக உள்ளது. எவ்வாறாயினும், ஜனாதிபதியின் விசேட வேலைத்திட்டத்துக்கு அமைவாக, மத்திய மாகாணத்திலும் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் விசேட திட்டம் அமுல்படுத்தப்படும்” என்றும் அவர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .