2025 ஜூன் 25, புதன்கிழமை

என்னை புகழ்வதைவிட, ராஜித தமிழர்களின் அன்றாட அவலங்களுக்காவது தீர்வுகாண உதவவேண்டும்: மனோ கணேசன்

Kogilavani   / 2011 செப்டெம்பர் 15 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ராஜித சேனாரட்ன எனது 20 வருடகால நல்ல நண்பர். என்னை பற்றிய அவரது நல்லெண்ணங்களுக்கு நன்றி. ஆனால் என்னை புகழ்வதைவிடவும், அப்பாவி தமிழ் குடிமக்கள் அன்றாடம் சந்திக்கும் எண்ணற்ற துன்பங்களில் சிலவற்றுக்காவது தீர்வுகான அவர் உதவிட வேண்டும். இதுதான் ராஜித ஒரு நல்ல நண்பனுக்கு செய்யும் உதவியாகும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அமைச்சர் ராஜித சேனாரட்ன ஊடகவியலாளர் மாநாட்டில் தன்னைப்பற்றி தெரிவித்த கருத்து தொடர்பாக மனோ கணேசன்  தெரிவித்துள்ளதாவது,

தமிழ் மக்களுக்காக நான் பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் துணிச்சலாக குரல் கொடுப்பதாக ராஜித என்னை புகழ்ந்துள்ளார். நான் நீண்ட நாட்களாகவே பாதுகாப்பு அச்சுறுத்தல்களுடன்தான் வாழ்ந்துகொண்டிருக்கின்றேன். ஆனால் இத்தகைய அச்சுறுத்தல்கள் கடுமையாக இருந்த காலகட்டத்திலேயே எனது தனிப்பட்ட பாதுகாப்பை பற்றி கவலைப்படுவதை நான் நிறுத்திவிட்டேன். ராஜித சேனாரட்ன அதிகாரப் பரவலாக்கல் கொள்கைக்கு ஆதரவானவர். கடந்த காலங்களிலே என்னுடனும், கூட்டமைப்பு எம்பி நண்பர் ரவிராஜூடனும் இணைந்து போருக்கு எதிரான தேசிய முன்னணியிலேயே தீவிரமாக செயற்பட்டவர். துரதிஷ்டவசமாக இன்று போரை முன்னின்று நடத்திய அரசாங்கத்திலே அமைச்சராக இருக்கின்றார். எனினும் கடந்த காலங்களை மறக்காமல் ராஜித கருத்து தெரிவித்துள்ளார். ஏற்றிவிட்ட ஏணியையும், வளர்த்துவிட்ட என்னையும் எட்டி உதைக்கும் நபர்கள் மத்தியில் பெரும்பான்மை இனத்தை சேர்ந்த ராஜித சேனாரட்ன கருத்து கவனிக்கத்தக்கதாகும்.

அவரது புகழ்ச்சியில் நான் மகிழ்ச்சியடையவில்லை. புகழ்ச்சியினால் மகிழ்ச்சியடையாத, அதேபோல் இகழ்ச்சியினால் தளர்ச்சியடையாத, மன முதிர்ச்சி என்னிடம் இன்று இருக்கின்றது. கடந்த காலங்களில் ஏற்பட்டுள்ள கசப்பான அனுபவங்கள் எதையும் தாங்கும் இதயத்தை எனக்கு தந்துள்ளது. ராஜித புகழ்ந்தாலும், புகழாவிட்டாலும்கூட தலைநகர தமிழ் மக்கள் ஒட்டுமொத்தமாக எதிர்வரும் தேர்தலில் ஜனநாயக மக்கள் முன்னணியின் ஏணிச்சின்னத்திற்கு வாக்களித்து எனது கரங்களை பலப்படுத்தவேண்டும் என்ற முடிவில் இருக்கின்றார்கள். அதாவது ராஜிதவின் ஆளுங்கட்சியின் சார்பாகவும், எதிர்கட்சிகள் சார்பாகவும் போட்டியிடும் தமிழ் வேட்பாளர்களை நிராகரித்து, எங்களுக்கு மாபெரும் வெற்றியை பெற்றுத்தருவதற்காக வாக்குரிமையுள்ள ஒவ்வொரு தமிழ் வாக்காளரும் ஏணிச் சின்னத்திற்கு வாக்களிப்பதற்காக தயாராக இருக்கின்றார்கள்.

தலைநகர தமிழ் மக்கள் நொந்துபோயிருந்த வேளையிலே அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுத்ததுடன், தெருவில் இறங்கி போராடியவர்கள் நாங்கள் என்பது தலைநகர தமிழ் பேசும் மக்களுக்கு நன்கு தெரியும். எதிர்காலத்தில் தமிழனுக்கு துன்பம் வந்தால் அதற்கு எதிராக குரல் கொடுப்பதற்கும் போராடுவதற்கும் எம்மை தவிர எவரும் இல்லை என்பதுவும் தலைநகர தமிழர்களுக்கு தெரியும். நானும் இனிமேலும் எவரையும் நம்ப தயாராக இல்லை. தலைநகர் உள்ளிட்ட கொழும்பு மாவட்டத்தை வழிநடத்தும் பொறுப்பை வேறு எவரிடமும் கையளிக்க நான் தயாராக இல்லை.  

கொழும்பு மாவட்டத்திலே இன்று எந்தவொரு பெரும்பான்மை கட்சிக்கும் தமிழ் வாக்குவங்கி என்று எதுவும் கிடையாது. தமிழர்கள் ஜனநாயக மக்கள் முன்னணியுடன் இணைந்து அணிதிரண்டுள்ளார்கள். எனவே இன்றும் சரி, எதிர்காலத்திலும் சரி கொழும்பு மாவட்டத்தில் தமிழர்களின் வாக்கு தங்களுக்கு தேவை என்று விரும்பும் எந்தவொரு பெரும்பான்மை தேசியக் கட்சியும் எம்மை அனுசரித்து போகவேண்டும். அதாவது, தலைநகர தமிழ் மக்களுக்கு நன்மை தரும் திட்டங்களையும், தேசிய ரீதியாக தமிழர்களுக்கு நியாயத்தை வழங்கும் கொள்கையையும் அங்கீகரிக்க வேண்டும். இதை எதையும் செய்யாமல் தமிழர்களின் வாக்குகளை மாத்திரம் சுரண்டி செல்வதற்கு எந்தவொரு பெரும்பான்மை கட்சிக்கும், பெரும்பான்மை இன அரசியல்வாதிக்கும் இனி இடந்தரமாட்டோம். இதுதான் எங்களது கொள்கை. இதுதான் எனது குரல். இதை நண்பர் ராஜித சேனாரட்ன புரிந்துகொள்வார் என நம்புகிறேன்.

ராஜித சேனாரட்ன தனது நண்பர்களான வாசுதேவ நாணயக்கார, டிலான் பேரேரா ஆகியோருடன் இணைந்து தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை கொண்டுவரும் செயற்பாட்டை தீவிரமாக முன்னெடுக்க வேண்டும். கூட்டமைப்புடன் அரசாங்கம் நடத்துகின்ற பேச்சுவார்த்தையை அர்த்தமுள்ளதாக மாற்றி கூட்டமைப்பு தலைவர்களுக்கு நம்பிக்கையை வழங்கவேண்டும். அரசியல் தீர்வு என்ற அடிப்படை பிரச்சினைக்கு உதவி செய்ய முடியாவிட்டாலும்கூட தமிழர்கள் சந்திக்கும் அன்றாட பிரச்சினைகளுக்காவது தீர்வுகான ராஜித உதவ வேண்டும். இரு நாட்களுக்கு முன்னர் கொழும்பு விளக்க மறியலில் வைகக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகள், சக சிங்கள கைதிகளால் தாக்கப்பட்டுள்ளார்கள். இத்தகைய தாக்குதல்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. அதேபோல் நேற்று முதல்நாள் முன்னேஸ்வரம் கோயிலுக்குள் நுழைந்த ஆளுந்தரப்பு அமைச்சர் சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு இந்துக்களின் மத உணர்வுகளை பாரதூரமாக புண்படுத்தியுள்ளார். வடக்கிலே கிரீஸ் மனிதர்கள் என்ற போர்வையில் படைத்தரப்பு தமிழ் மக்களின் மீது அடக்கு முறையை பிரயோகிக்கின்றது. கடைசி சம்பவமாக வவுனியாவில் மதப்போதகர், கர்ப்பிணித்தாய் உட்பட பல தமிழர்கள் தாக்கப்பட்டு படுகாயமடைந்துள்ளார்கள். இத்தகைய சம்பவங்கள் தொடர்பாக அரசாங்கத்திற்குள் இருக்கக்கூடிய தமிழ் அமைச்சர்களும், எம்பிக்களும், வாய் மூடி மௌனிகளாக இருக்கின்றார்கள். எனவே தமிழர்கள் சந்திக்கும் இத்தகைய அன்றாட துன்பங்கள், மனித உரிமை மீறல்கள், தாக்குதல்கள் தொடர்பிலாவது அமைச்சர் ராஜித சேனாரட்ன பாராளுமன்றத்திலும், அமைச்சரவையிலும், அரசாங்கத்திற்குள்ளும் குரல் கொடுக்க வேண்டும். அதுதான் ராஜித சேனாரட்னவின் நண்பனான மனோ கணேசனுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.


You May Also Like

  Comments - 0

  • Riznia Friday, 16 September 2011 05:17 AM

    கொழும்பில் தமிழ் மக்களின் வாக்கு ஐ.தே.கவுக்கு கிடைக்காமல் மனோ கணேசனின் கட்சிக்கு கிடைக்கட்டும் என்ற நோக்கத்தில் ராஜித இப்படி கூறினாரா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .