2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

மேல்மாகாணத்தில் சகல பட்டதாரிகளுக்கும் வேலைவாய்ப்பு : பிரபா எம்.பி

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 26 , மு.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேல்மாகாணத்திலுள்ள பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் பொருளாதார அமைச்சினூடாக அபிவிருத்தி உத்தியோகஸ்தர் போன்ற அரசாங்க வேலைவாய்ப்பினை நாம் பெற்றுக் கொடுத்துள்ளோம். இதுவரை 691 நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாத அளவில் மேலும் 300 ஆசிரியர் வெற்றிடமாக உள்ள பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்படும் என்று ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் மேல்மாகாணத்தில் வேலையில்லா பட்டதாரிகள் என்று எவரும் இருக்க மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

தன்னை சந்திக்க வந்த தமிழ் பட்டதாரிகள் குழுவினரிடமே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் இக்கலந்துரையாடலின் போது பிரபா கணேசன் எம்.பி தெரிவித்ததாவது,

கடந்த காலங்களில் மேல் மாகாணத்திலுள்ள பட்டதாரிகள் வேலை வாயப்பின்றி இருந்தார்கள். பட்டதாரிகளாக இருந்தும் அவர்களின் கல்வி தராதரத்திற்கு பொருத்தமற்ற பதவிகளில் தனியார் துறைகளிலே வேலை செய்து வருகின்றனர். இதன் மூலம் தேசிய நலன் பெரிதளவு பாதிக்கப்படுகின்றது. இவர்களின் கல்வி தராதரத்திற்கேற்ப அரச உத்தியோககங்கள் பெற்றுக் கொடுக்க வேண்டிய கடற்பாடு எனக்கு உள்ளது.

கடந்த காலங்களில் எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் பெற்றுக் கொடுக்காத அரச வேலைவாய்ப்புகளை இன்று நாம் பெற்றுக் கொடுத்துள்ளோம். கடந்த மூன்று வருட நாடாளுமன்ற காலத்தில் எனது மக்களுக்கு பெற்றுக் கொடுக்கப்பட்ட வேலை வாய்ப்பு பாடசாலை அபிவிருத்திகள், தோட்டத் தொழிலாளர்களுக்கான உட்கட்ட அபிவிருத்திகள் போன்றவை மூலம் மக்கள் பெரிதளவு பயன் பெற்றுள்ளனர். எதிர்காலத்திலும் இதனை விட அதிகமான அபிவிருத்திகளும் வேலைவாய்ப்புகளும் பெற்றுக் கொடுக்கப்படும். விளம்பரங்களுக்காக ஒருபோதும் அரசியல் செய்வதில்லை. நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையிலே கிடைக்கப்பெறும் சகல அதிகாரங்களையும் எமது மக்களுக்காகவே பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இங்கே வந்திருக்கும் உங்களில் ஒரு சிலர் மேல்மாகாணத்தை சாராதாவர்கள் என்று எனக்கு தெரிவித்துள்ளீர்கள். டிசம்பர் மாதத்தில் வழங்கப்படவிருக்கும் ஆசிரியர் நியமனங்களுக்கு மேல் மாகாணத்தில் பட்டதாரிகளின் தொகை குறைவாக இருக்கின்ற படியினால் உங்களுக்கும் வேலைவாய்ப்பினை இம்முறைப் பெற்றுக் கொள்ளகூடியதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பட்டதாரிகளினுடனான சந்திப்பில் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கலாநிதி சுரேஷ் கங்காதரன் கல்வித்துறை நிதி ஒதுக்கீட்டுச் செயலாளர் எம்.பிருதிவிராஜ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .