2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

இ.போ.ச பஸ் மீது கல்வீசி தாக்குதல்

Gavitha   / 2015 செப்டெம்பர் 24 , பி.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

இலங்கை போக்குவரத்துச் சேவையின் மன்னார் டிப்போவுக்கு சொந்தமான பஸ் மீது புதன்கிழமை (23) இரவு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டித்து, மன்னார் அரச போக்குவரத்துச் சேவைகள் இடைநிறுத்தப்பட்ட நிலையில், மன்னார் பொலிஸார் வழங்கிய உறுதிமொழியையடுத்து பணிப்பகிஸ்கரிப்பு கைவிடப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,

யாழ்ப்பாணத்தில் இருந்து புதன்கிழமை மாலை 5.30 மணியளவில் மன்னார் நோக்கி வருகை தந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பயணிகள் பஸ், இரவு 8 மணயளவில் மன்னார் இலங்கை போக்குவரத்து சேவை பஸ் தரிப்பிடத்தை வந்தடைந்துள்ளது.

பின்னர் பயணிகளை இறக்கிய நிலையில் குறித்த பஸ், மன்னார் டிப்போ நோக்கி தனது பயணத்தை ஆரம்பித்த போது பஸ் சாரதி, நடத்துனர் மற்றும் சில பயணிகளும் பஸ்ஸில் இருந்துள்ளனர்.

எழுத்தூர் செல்வநகர் கிராமம் ஊடாக சென்று கொண்டிருந்த குறித்த பஸ்ஸை மோட்டார் சைக்கிளில் முகத்தை மூடிக்கொண்டு வந்த சுமார் 10 பேர் கொண்ட குழு, இடைநிறுத்தி கற்களை வீசி தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

இதன்போது, குறித்த பஸ் சாரதி மற்றும் குறித்த பஸ்ஸில் பயணித்த யுவதி ஆகியோர் பலத்த காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

புதன்கிழமை இரவு உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற மன்னார் பொலிஸார், காயங்களுக்கு உள்ளான சாரதியிடம் பெற்றுக்கொள்ளப்பட்ட வாக்கு மூலத்தின் அடிப்படையில் சந்தேகத்தின் பேரில் அப்பகுதியைச் சேர்ந்த தனியார் பஸ் சாரதியை கைதுசெய்துள்ளனர்.

இந்த நிலையில், குறித்த தனியார் பஸ் சாரதியை கைது செய்தமையை  கண்டித்து, மன்னார் தனியார் பஸ் உரிமையாளர்கள், நேற்று வியாழக்கிழமை (24) காலை முதல் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.

இதேவேளை, தாக்குதலை மேற்கொண்ட ஏனையோரையும் கைது செய்யுமாறும் தமக்கு பாதுகாப்பை வழங்குமாறும் கோரி இலங்கை போக்குவரத்துச் சேவையின் மன்னார் டிப்போ பணியாளர்கள், நேற்று வியாழக்கிழமை காலை 6 மணிமுதல் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.

இதனால், பயணிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்த நிலையில் போக்குவரத்தை மேற்கொள்ள முடியாத நிலையில் காணப்பட்டனர்.

உடனடியாக  மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் விக்கிரமசிங்க, உதவி பொலிஸ் அத்தியட்சகர் (2) ஜெய சேகர மற்றும் மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அஜந்த ரொட்ரிகோ ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து, அரச மற்றும் தனியார் பஸ் சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதன்போது, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் ஆகியோரும் சம்பவ இடத்துக்கு வந்ததுடன் இரு தரப்புடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், பொலிஸ் அதிகாரிகளின் கோரிக்கைக்கு அமைவாக இலங்கை அரச போக்குவரத்துச் சேவையின் மன்னார் டிப்போ பணியாளர்கள், பணிப்பகிஸ்கரிப்பை கைவிட்டு காலை 9 மணி முதல் வழமை போன்று தமது சேவையை முன்னெடுத்து வருகின்றனர்.

எனினும், மன்னார் தனியார் போக்குவரத்துச் சேவை பணியாளர்கள் பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொண்டிருந்தனர்.

கைதுசெய்யப்பட்டுள்ள மன்னார் தனியார் பஸ் சாரதியை விடுதலை செய்ய வேண்டும் எனவும், தாக்குதல்களை மேற்கொண்டவர்களை கைது செய்யாது தாக்குதல் சம்பவத்துடன் தொடர்பில்லாத ஒரு சாரதியை கைது செய்தள்ளதாகவும இதனை தாம் வன்மையாக கண்டிப்பதாக மன்னார் தனியார் போக்குவரத்துச் சங்கம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .