2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

‘சம்பந்தனுடன் கலந்துரையாடவுள்ளேன்’

எம். றொசாந்த்   / 2017 ஒக்டோபர் 04 , பி.ப. 01:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகள் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனுடன் கலந்துரையாடவுள்ளேன் என வட மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில், இன்று (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பத்தாவது நாளாகவும் இன்றும் (04) உண்ணாவிரதம் இருக்கும் சுலக்ஸன், திருவருள், தர்சன் ஆகியோரை நேற்று (03) நேரில் சென்று சந்தித்தேன். அவர்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். நான்கு ஆண்டுகளுக்கு மேலாக வவுனியாவில் அவர்களுடைய வழக்கு இடம்பெற்று வந்தது. கடந்த மாத இறுதியில், வழக்கு விசாரணைக்கு திகதியிடப்பட்ட பின்னர் சட்டமா அதிபர் திணைக்களத்தால் அநுராதபுர மேல் நீதிமன்றுக்கு வழக்கு மாற்றப்பட்டது.

அநுராதபுர நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டால், வழக்கை மீள் விசாரணை செய்ய வேண்டியிருக்கும், மொழிப் பிரச்சினை ஏற்படும் எனவும் தெரிவித்து இந்தக் குற்றத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். வழக்கை விரைவில் நடத்த முடியும். குறைந்தளவான தண்டனை கிடைக்கும் எனக் கூறி, விசாரணைகளை நடத்தாது குற்றத்தை ஏற்றுக்கொள்ள வைக்க முயற்சிகள் இடம்பெற்றுள்ளன.

உண்ணாவிரதமிருக்கும் கைதிகளை சிவசக்தி ஆனந்தனும் நானும் தான் சந்தித்குள்ளோம். வேறு யாரும் வரவில்லை.  முன்னர் சிறையில் உண்ணாவிரதம் இருந்தால் அவர்களைச் சந்திக்க பலர் வருவர். ஆனால், தற்போது யாரும் சந்திக்க வரவில்லை என சிறைச்சாலை அத்தியட்சகர் கூட ஆதங்கப்பட்டார். இது தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தனுடன் கலந்துரையாடவுள்ளேன். வட மாகாண முதலமைச்சருடனும் கலந்துரையாடவுள்ளேன்” எனத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .