2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

சிறுமியை வன்புணர்ந்தவருக்கு கடூழிய சிறை

எம். றொசாந்த்   / 2018 மார்ச் 12 , பி.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழில், 16 வயதுக்கு உட்பட்ட சிறுமியை கடத்தி சென்று வன்புணர்வுக்கு உட்படுத்திய இளைஞனுக்கு 15 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் இன்று (12) தீர்ப்பளித்தார்.

அதேவேளை குறித்த குற்றவாளிக்கு உதவிய குற்றச்சாட்டில் அவரது நண்பர் ஒருவருக்கு 5 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை தீர்ப்பளித்தார்.

வடமராட்சி, வல்வெட்டித்துறையில் 2014ஆம் ஆண்டு செம்ரெம்பர் மாதம் 13 வயதுச் சிறுமி ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டார்.

சிறுமி வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் 22 வயதுடைய (குற்றம் இடம்பெற்ற போது) இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களுக்கு எதிராக பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் சுருக்கமுறையற்ற விசாரணைகள் இடம்பெற்றன. அதன் நிறைவில் சந்தேகநபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன் வழக்குக் கோவைகள் சட்ட மா அதிபர் திணைக்களத்திடம் பாரப்படுத்தப்பட்டன.

முதலாவது சந்தேநபர் மீது கடத்தல் மற்றும் வன்புணர்வுக் குற்றச்சாட்டும் இரண்டாவது சந்தேகநபர் மீது கடத்தல் குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டு சட்ட மா அதிபரால் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து குறித்த வழக்கு விசாரணைகள் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் நடைபெற்று வந்தது. அந்நிலையில் இன்று (12) குறித்த வழக்கு தீர்ப்புக்காக எடுத்து கொள்ளப்பட்டது. 

அதன் போது “சந்தேகநபர்கள் இருவரும் குற்றத்தை ஏற்றுக்கொள்கின்றனர். தமது குற்றத்துக்காக அவர்கள் தற்போது மனம் வருந்துகின்றனர். அவர்கள் இருவரினதும் குடும்ப நிலையைக் கருத்திற்கொண்டு குறைந்தபட்ச தண்டனையை வழங்குமாறு மன்றிடம் கோருகின்றேன்” என்று எதிரிகள் தரப்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி கருணை விண்ணப்பம் செய்தார்.

“எதிரிகள் குற்றத்தை ஏற்றுக்கொண்டமையால் அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கவேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடு பெற்றுக்கொடுக்க மன்று உத்தரவிடவேண்டும்” என  அரச சட்டத்தரணி சுகாந்தி கந்தசாமி மன்றில் விண்ணப்பம் செய்தார்.

அதனை தொடர்ந்து நீதிபதி தனது தீர்ப்பில்  “குற்றவாளிகள் இருவரும் குற்றத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர். முதலாவது எதிரி சிறுமியைக் கடத்திச் சென்று வன்புணர்ந்துள்ளார். இரண்டு குற்றங்களுக்காகவும் முதலாவது எதிரிக்கு 15 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை வழங்கப்படுகிறது.

அத்துடன் முதலாவது எதிரி, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5 இலட்சம் ரூபாய்  இழப்பீட்டை வழங்கவேண்டும். அதனை வழங்கத் தவறின் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும். தண்டமாக 5 ஆயிரம் ரூபாய் செலுத்தவேண்டும். அதனை செலுத்தத் தவறின் ஒரு மாத சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடும்.

இரண்டாவது எதிரி, சிறுமியைக் கடத்திச் செல்ல முதலாவது எதிரிக்கு துணை நின்றுள்ளார். அதற்கு அவருக்கு 2 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை வழங்கப்படுகிறது. அந்தத் தண்டனை 5 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்படுகிறது. அத்துடன், 5 ஆயிரம் ரூபாய் தண்டம் செலுத்த வேண்டும். அதனைச் செலுத்தத் தவறின் ஒரு மாத சிறைத் தண்டனையை அனுபவிக்கவேண்டும்” என்று மேல் நீதிமன்ற நீதிபதி தண்டனைத் தீர்ப்பை வழங்கினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .