Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 23, திங்கட்கிழமை
Editorial / 2018 மார்ச் 20 , பி.ப. 12:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
“செய்ந்நன்றியை மறக்கவில்லை என்று கூறும் ஜனாதிபதி, அதற்கான பிரதியுபகாரங்களை இதுவரையில் தமிழ் மக்களுக்குச் செய்யவேயில்லை. அவரது வருகை மட்டுமே பிரதியுபகாரங்களாக அமையாது என்பதை அவர் கவனத்திற் கொள்ள வேண்டும்” என்று தமிழ்த் தேசியப்பசுமை இயக்கத்தின் தலைவரும் முன்னாள் வடமாகாண விவசாய அமைச்சருமான பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் தனக்குச் செய்த நன்றியை ஒரு போதும் மறக்கவில்லை என்றும் அதன் காரணமாகவே தமிழர் பிரதேசங்களில் நிகழும் நிகழ்ச்சிகளில் தவறாது கலந்து கொள்வதாகவும் நேற்று (19) யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார்.
ஜனாதிபதியின் கருத்துத் தொடர்பாக பொ.ஐங்கரநேசன் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும்,
தமிழ் மக்களுக்கு ஜனாதிபதி நன்றி சொல்வது இதுதான் முதற் தடவையல்ல. தமிழ் மக்களின் வாக்குகளாலேயே தான் அரியணை ஏறியதைத் தமிழர் தாயகங்களுக்கு வருகை தருகின்றபோதெல்லாம் மறக்காமல் நினைவு கூர்ந்தே செல்கின்றார்.
ஆனால், அதற்கான பிரதியுபகாரங்களை இதுவரையில் தமிழ் மக்களுக்குச் செய்யவேயில்லை. அவரது வருகை மட்டுமே பிரதியுபகாரங்களாக அமையாது என்பதை அவர் கவனத்தில் கொள்ள வேண்டும்.
காணாமல் ஆக்கப்பட்டோரைக் கண்டறிய வேண்டியும், அரசியல் கைதிகளின் விடுதலையை வேண்டியும், ஏதிலிகளாக அல்லலுற்று அலையும் எம் மக்கள் தம் சொந்த இடங்களில் குடியேற விரும்பியும், தங்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வைக் கோரியுமே ஒரு மாற்றத்துக்காக மைத்திரிபால சிறிசேனவுக்கு தமிழ் மக்கள் வாக்களித்தார்கள். ஆனால், இவற்றுக்கெல்லாம் ஜனாதிபதி அவர்கள் இதுவரையில் காத்திரமான நடவடிக்கைகள் எதனையும் எடுக்காமல் தமிழ் மக்களின் மனங்களைப் புண்படுத்தும் பதில்களையே தொடர்ந்தும் வெளிப்படுத்தி வருகிறார்.
காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரங்களைக் கையாள்வதற்கென்று குழுவொன்றை அமைத்து விட்டதால் அது தொடர்பாகத் தான் இனிமேல் சொல்வதற்கு எதுவும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அவரின் வருகையை ஒட்டி கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை நடத்திக் கொண்டிருந்த போதே அம்மக்களின் உணர்வு நிலையை உதாசீனம் செய்து இவ்வாறு மொழிந்து சென்றிருக்கிறார்.
போர் நடந்த போது அன்றைய அமைச்சரவையில் ஒருவராக இருந்தவரும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வெளிநாடு சென்றிருந்த போது பதில் பாதுகாப்பு அமைச்சராக இறுதி யுத்தத்தை நடாத்திச் சென்றவரும் என்ற வகையில் ஜனாதிபதி மைத்திரி பாலசிறிசேன காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் பதில் சொல்ல வேண்டிய கட்டாய கடப்பாட்டைக் கொண்டவராவார்.
காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் தங்களது பிள்ளைகள் புகைப்படம் ஒன்றில் ஜனாதிபதி அவர்களின் அருகில் நிற்பதாக அடையாளம் காட்டிய பின்னரும் ஜனாதிபதி அவர்கள் இப்பிரச்சினையைக் குழுவிடம் கையளித்துத் தான் தப்பிக்க முயற்சிப்பதைத் தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
மக்கள் விடுதலை முன்னணியின் கிளர்ச்சியாளர்கள் அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்த அரசாங்கம் தமிழ் அரசியல் கைதிகளை மட்டும் தொடர்ந்தும் சிறையில் வாட்டி வருகிறது. நல்லாட்சி அரசாங்கத்துக்குத் தமிழ் மக்கள் நம்பி வாக்களித்ததன் பின்னருங்கூட அரசாங்கம் இவர்களின் விடுதலையில் எவ்வித அக்கறையையும் காட்டவில்லை. இவர்களது குடும்பங்கள் அனுபவித்து வரும் துயரங்கள் சொல்லிமாளாதவை. தாயின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள வருகை தந்த அரசியல் கைதியான தனது தந்தையுடன் செல்வதற்காகக் காவல்துறையின் வாகனத்தில் பிஞ்சுப் பாலகி ஏறிய காட்சியைப் பார்த்து பொலிஸாரே கண்ணீர் உதித்திருக்கின்றனர். ஆனால் இதுவரையில் சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் குடும்பங்கள் அனுபவித்து வரும் இன்னோரன்ன பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி கவனம் கொள்ளாதவராகவே இருந்து வருகிறார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் வார்த்தைகளால் நன்றி சொல்வதை விடுத்து அந்நன்றியை செயல்களில் காட்ட வேண்டும் என்பதே போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு. தவறின் செய்ந்நன்றி கொன்றவராகவே வரலாற்றில் இந்த ஜனாதிபதியும் இடம்பெறுவார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
20 minute ago
30 minute ago