2025 ஜூன் 26, வியாழக்கிழமை

‘தென்னிலங்கை கட்சிகளுக்கு வாக்களித்தால், படுகொலையை நியாயப்படுத்தியது போலாகிவிடும்’

Editorial   / 2018 பெப்ரவரி 01 , பி.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

“தென்னிலங்கைக் கட்சிகளுக்கு நாங்கள் வாக்களித்தால், நிகழ்ந்த தமிழ் இனப்படுகொலையை  நாங்களே நியாயப்படுத்தியது போலாகிவிடும்” என வடமாகாண முன்னாள் விவசாய அமைச்சரும் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவருமான பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

மணியந்தோட்டத்தில் நேற்று (31) இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சிங்களக் கட்சிகள் எல்லாம் தேர்தல்களின்போது ஆசனங்களைப் பிடிப்பதுக்காக தங்களுக்கு இடையே போட்டிபோட்டுக் கொண்டாலும், இலங்கை ஒரு பௌத்த சிங்கள நாடு என்ற கருத்து நிலையில் ஒன்றாகவே நிற்கின்றன. மஹிந்த ராஜபக்ஷவும் அவரது சகோதரர்களும் வெல்லப்பட முடியாமல் இருந்த விடுதலைப்புலிகளைத் தாமே தோற்கடித்ததாக மார்தட்டுகிறார்கள். ரணில் விக்கிரமசிங்க அணியினர், தாங்களே கருணாவைப் புலிகளிடம் இருந்து பிரித்து புலிகளைப் பலவீனப்படுத்தித் தோற்கடிப்பதுக்கு காரணமாக இருந்தார்கள் என்று பெருமை பேசுகிறார்கள். இலங்கையை மாறிமாறி ஆண்ட இரண்டு பெருந்தேசியவாதக் கட்சிகளுமே தமிழின அழிப்பில் ஒன்றுக்கு ஒன்று சளைத்தது அல்ல.

இப்போது யுத்தம் முடிந்து விடுதலைப்புலிகள் களத்தில் இல்லை என்றவுடன் இந்தக் கட்சிகள் வடக்கு கிழக்கில் எல்லா வட்டாரங்களிலுமே போட்டிபோடுவதற்குக் குதித்துள்ளன. அதுவும்,ஆசை வார்த்தைகளைக் காட்டி எம்மவர்களையே வேட்பாளர்களாகவும் இறக்கியுள்ளார்கள். பரப்புரைக்காக இந்தக் கட்சிகளின் தலைவர்கள் எல்லோரும் இங்கே வந்து போகின்றார்கள். இங்கே தாங்கள் போட்டியிடுவதன் மூலம் தமிழ் மக்களிடையே தங்களுக்கு எதிர்ப்பு இல்லை என்று உலகநாடுகளுக்குக் காட்டுவதற்கு இவர்கள் விரும்புகிறார்கள். இந்தக் கட்சிகளுக்கு நாங்கள் இடுகின்ற வாக்குகளின் மூலம், எங்கள் மூலமே இங்கு நடைபெற்றது தமிழ் இனப்படுகொலையல்ல என்று சொல்லவைக்க விரும்புகின்றார்கள்” என தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .