2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

நிதியில்லாததால் மீளக் குடியமர்த்த முடியவில்லை

Editorial   / 2018 செப்டெம்பர் 03 , பி.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.நிதர்ஷன்

யாழ். மாவட்டத்தில் வலி வடக்கு பிரதேசத்தில் 1,600 குடும்பங்களுக்கு சொந்தமான காணிகள், இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டு ஆறு மாதங்கள் கடந்திருக்கும் நிலையில் அங்கு மக்களை மீள்குடியேற்றம் செய்வதற்கு போதுமான நிதியை அரசாங்கம் வழங்காமல் இருக்கிறதால் அந்த மக்களளை மீளக் குடியமர்த்த முடியாத நிலைமை இருப்பதாகவும் ஆகவே பிரதேசத்தில் 1,600 குடும்பங்களுக்கு மீள் குடியேற்றத்துக்காக விசேட நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

2019ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் உள்ளடக்கப்படவேண்டிய விடயங்கள் குறித்து மக்களின் கருத்துக்களை அறிவதற்காக நாடாளுமன்ற நிதிக்குழு, யாழ். மாவட்ட செயலகத்தில் திறந்த கலந்துரையாடல் ஒன்றை இன்று நடாத்தியிருந்தது. குறித்த கலந்துரையாடலிலேயே மேற்படி கோரிக்யை மக்கள் பிரதிநிதிகளும் அரச அதிகாரிகளும் முன்வைத்தனர்.

நிதிக்குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தலைமையில் நடைபெற்ற மேற்படி கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினரும் நிதிக்குழு உறுப்பினருமான மாவை சேனாதிராஜா கருத்துத் தெரிவிக்கையில்,

“யாழ். மாவட்டத்தில் விசேடமாக வலி வடக்கு பிரதேசத்தில் மக்களுடைய காணிகள் இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளபோதும் அங்கு மக்களை மீள்குடியேற்றம் செய்வதற்கு போதுமான நிதியை அரசாங்கம் வழங்கவில்லை.

வலி வடக்கில் 1,600 குடும் பங்களுக்கு சொந்தமான 823 ஏக்கர் நிலம் இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலத்தில் மீள்குடியேறவுள்ள மக்களுக்காக 1640.83 மில்லியன் ரூபாய் நிதி தேவை என கணிப்பீடு செய்யப்பட்டிருக்கும் நிலையில் அரசாங்கம் வெறும் 700 மில்லியன் ரூபாய் நிதியையே வழங்கியுள்ளது. இதற்கு முன்னரும் அரசாங்கம் 226 மில்லியன் ரூபாய் நிதிஅயி இன்னும் விடுவிக்கவில்லை. எனவே மீள்குடியேற்ற தேவைகளுக்காக 2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் விசேட நிதி ஒதுக்கீடு செய்யப்படவேண்டும். என்பதை நாடாளுமன்ற நிதிக்குழு பரிந்துரை செய்யவேண்டும்” எனக் கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து எம்.ஏ.சுமந்திரன் கூறுகையில், “நல்லிணக்க அமைச்சின் கீழ் ஒரு தொகை நிதி உள்ளபோதும் நல்லிணக்க அமைச்சு என்பதால் அந்த நிதியை மீள்குடியேற்றத்துக்கு மட்டும் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் இல்லை. அதனால் வேறு தேவைகளுக்காக அந்த நிதி பயன்படுத்தப்படுகிறது. எனவே அதனை மீள்குடியேற்றத்துக்கும் பயன்படுத்த வேண்டும் என நிதிக்குழு பரிந்துரை செய்யும்” என்றார்.

தொடர்ந்து தெல்லிப்பளை பிரதேச செயலர் சண்முகராஜா சிவசிறி கருத்துத் தெரிவிக்கையில், “1,600 குடும்பங்களுக்கு சொந்தமான நிலம் விடுவிக்கப்பட்டு ஆறு மாதங்கள் கடக்கும் நிலையில் மக்களை அங்கு மீள்குடியேற்றம் செய்வதற்கான நிதி கிடைக்கப் பெறவில்லை. 2011ஆம் ஆண்டின் பின்னர் தொடர்ச்சியாக மக்களுடைய காணிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றது. இந்த பகுதிகளில் 30 ஆண்டுகளாக மக்கள் வாழாத அல்லது பயன்படுத்தாத நிலையில் காடுகளாக மாறி கட்டிடங்களோ வேறு விடயங்களோ பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுகின்றது. இந்நிலையில், மீள்குடியேறும் மக்களுக்கு உட்கட்டுமான வசதிகள், அடிப்படை வசதிகளை வழங்கியாக வேண்டிய தேவை உள்ளது.

இந்தாண்டு வலி வடக்கில் 750 ஏக்கர் நிலம் விடுவிக்கப்பட்டுள்ளது. நீண்டகாலம் உறவினர், நண்பர்கள் வீடுகளில் வாழ்ந்த மக்கள் தமது சொந்த நிலங்களில் மீள்குடியேறுவதற்காக எமக்கு நெருக்கத்தை கொடுக்கிறார்கள். ஆனால், மீள்குடியேற்றத்துக்கான கொடுப்பனவுகள் போதுமானதாக ஒல்லை. எனவே மீள்குடியேற்றத்திற்கென விசேடமான நிதி ஒதுக்கீடு தேவையாக உள்ளது” என்றார்.

தொடர்ந்து, யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) எஸ். முரளிதரன் கருத்துத் தெரிவிக்கையில், 1990ஆம் ஆண்டு காலப் பகுதியில் இடம்பெயர்ந்த மக்களுடைய மீள்குடியேற்ற விடயம் மிகவும் பாரிய சவாலாக உள்ளது. 2015ஆம் ஆண்டுக்கு பின்னர் வலிரூபவ்வடக்கில் 4,000 ஏக்கர் நிலம் விடுவிக்கப்பட்டுள்ளது. இக்காணிகளில் மக்களை மீள்குடியேற்றம் செய்வதற்கு 2016, 2017ஆம் ஆண்டுகளில் மொத்தமாக 6,000 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், 2018ம் ஆண்டு 250 மில்லியன் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டுகளில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் 5 சதவீதம் கூட இல்லை.

மேலும் 2016ஆம் ஆண்டில் செய்யப்பட்ட கணிப்பீட்டின்படி 33,000 குடும்பங்களுக்கு வீடுகள் தேவையாக உள்ளது. அதில், 6,500 குடும்பங்களுக்கு மட்டுமே இதுவரையில் வீடுகள் வழங்கப்பட்டுள்ளதன. 26,500 குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கப்படாத நிலை தொடர்கிறது. வீடுகள் மக்களுடைய விருப்பத்துக்கு அமைவாக வழங்கப்பட வேண்டும். மேலும் 1990ஆம் ஆண்டு இடம்பெயர்ந்த மக்களுடைய நிலங்கள் 30 ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாமையால் காடுகளாக மாறியுள்ளதுடன் அந்த நிலங்களில் ஒன்றுமே இல்லாமல் வெறுமையாக காணப்படுகின்றது. ஆகவே அங்கு மீள்குடியேறும் மக்களுக்கு எல்லாவற்றையும் வழங்கவேண்டிய கட்டாயம் உள்ளது.

அந்தவகையில், மீள்குடியேறும் மக்களுக்கு உட்கட்டுமான வசதிகளையும் அடிப்படை வசதிகளையும் ஒன்றாகச் சேர்த்தே செய்ய வேண்டியுள்ளது. இதேபோல் பகுதியளவில் சேதமடைந்த வீடுகளையும் மீள வழங்கவேண்டிய தேவை உள்ளது” என்றார்.

இதனடிப்படையில் மீள்குடியேற்றத்துக்கான நிதி தேவை என்பதை நிதிக்குழு ஏற்றுள்ளதுடன் அதனை உரியவர்களுக்கு ஆற்றுப்படுத்துவதற்கும் இணங்கியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X