2025 ஜூன் 23, திங்கட்கிழமை

புலனாய்வாளர்கள் என அறிமுகப்படுத்திய இருவர் வர்த்தக நிலையத்தில் கொள்ளை

எம். றொசாந்த்   / 2018 மார்ச் 14 , பி.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ் சாவகச்சேரி பகுதியில் தம்மை புலனாய்வாளர்கள் என அறிமுகப்படுத்திய இருவர் வர்த்தக நிலையத்தில் 12 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

சாவகச்சேரி கிராம்பு பகுதியில் சில தினங்களுக்கு முன் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் சம்பவம் இடம்பெற்ற தினத்தன்று பொருட்களை கொள்வனவு செய்வதுக்காக சாவகச்சேரி நகருக்கு சென்றிருந்தார்.

அவ்வேளை, வர்த்தக நிலையத்தைப் பார்த்து கொள்ளுமாறு கூறி முதியவர் ஒருவரை வர்த்தக நிலையத்தில் நிறுத்தி விட்டு சென்றிருந்தார்.

முதியவர் வர்த்தக நிலையத்தில் நின்றிருந்த வேளை, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் தம்மை புலனாய்வாளர்கள் என அறிமுகப்படுத்திக்கொண்டு, கடைக்குள் கஞ்சா போதைப்பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. கடையை சோதனையிட வேண்டும் என கூறி முதியவரை அங்கிருந்த கதிரையில் அமருமாறு கூறி விட்டு கடையில் சோதனை நடத்தியுள்ளனர்.

இறுதியில், கடையில் கஞ்சா இல்லை என கூறிய இருவரும் மோட்டார் சைக்கிளில் செல்ல ஆயத்தமான வேளை, குறித்த கடைக்கு பொருட்களை வாங்க வந்த பெண்ணின் சங்கிலியை அறுக்க முற்பட்டுள்ளனர்.

குறித்த பெண் தனது சங்கிலியை கைகளால் பிடித்துக்கொண்டு கூக்குரல் எழுப்பவே, குறித்த நபர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுவிட்டனர்.

இதனைத் தொடர்ந்து, முதியவர் கடையிலிருந்த பணத்தை அவதானித்த போது, 12 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையிடப்பட்டமை தெரியவந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .