2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

போதைப்பொருள் கடத்தலை முறியடிக்க இலங்கை - இந்திய கூட்டு நடவடிக்கை அவசியம்

Princiya Dixci   / 2016 மே 31 , மு.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கில் போதைப்பொருள் கடத்தல் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கு இலங்கை அரசும், இந்திய அரசும் இணைந்து கூட்டு நடவடிக்கை எடுப்பது தொடர்பில் ஆராயப்பட்டு அதன் பிரகாரம் நடவடிக்கை எடுப்பதன் ஊடாக அதனைக் கட்டுப்படுத்துவதற்குரிய சாத்தியப்பாடுகள் இருப்பதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இவ் விடயம் தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்துள்ள செயலாளர் நாயகம், வடக்கில், குறிப்பாக யாழ். குடாநாட்டின் கரையோரப் பகுதிகளினூடாக நம் நாட்டுக்கு தற்போது அதிகளவில் போதைப்பொருட்கள் கடத்தப்பட்டு, அவற்றில் பெரும்பாலானவை தென் பகுதிக்குக் கொண்டு செல்லப்படுவதாக அறிய முடிகிறது. 

இதனூடாக யாழ். குடா நாட்டில் போதைப்பொருள் பாவனையானது படிப்படியாக அதிகரித்து வரும் நிலையே காணப்படுகிறது. 

போதைப்பொருள் பாவனை காரணமாக யாழ். குடாநாட்டில் அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்ற சமூகச் சீர்கேடுகள் குறித்து பல்வேறு தரப்பினரும் சுட்டிக்காட்டி வருகின்றனர். 

இதனைக் கட்டுப்படுத்துவதற்கு பொலிஸார் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும், போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகள் தொடரவே செய்கின்றன என்பதை அறியக்கூடியதாக உள்ளது.

இவ்வாறான கடத்தல்களில் ஓரளவு பொருட்கள் பொலிஸாரினால் பிடிக்கப்படுகின்ற போதிலும், அவை அனைத்தும் தரைப் பகுதிகளில் வைத்தே பிடிக்கப்படுகின்றன. எனினும், இவற்றைக் கடலில் வைத்தே பிடிப்பதற்கான ஏற்பாடுகளை கடற்படையினர் ஊடாக பரவலாக்கப்படுவது அவசியமாகும். 

அதேநேரம் இந்தியக் கரையோரப் பகுதிகளினூடாக இவ்வாறான போதைப்பொருட்கள் - குறிப்பாக கேரள கஞ்சா போன்றவை அதிகளவில் கடத்தப்படுவதாகவும் அறிய முடிகிறது. 

எனவே, இதனைத் தடுப்பதற்கு இந்திய அரசின் உதவியும் பெறப்படுதல் அவசியமாகும் எனக் குறிப்பிட்டுள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X