2025 ஜூன் 26, வியாழக்கிழமை

போர்க்குற்றம் இடம்பெறாமல் தடுக்க வேண்டும்: மாவை

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 18 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணை நடைபெற்று குற்றங்கள் செய்தவர்களுக்கு தண்டனை வழங்குவதன் மூலம் எதிர்காலத்தில் இவ்வாறான போர்க் குற்றங்கள் இடம்பெறாமல் தடுப்பதுடன், இலங்கையில் தமிழர்கள் எதிர்நோக்கி வரும் இனப்பிரச்சினை தீர்க்கப்படும் நிலையும் இன அழிப்பு நடவடிக்கையிலிருந்து தமிழர்கள் பாதுகாக்கப்படுதலும் ஏற்படுத்தப்படவேண்டும் என தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார்.

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றம் தொடர்பில் கலப்பு நீதிமன்றம் ஒன்றின் ஊடாக விசாரணை மேற்கொள்ளுவதற்கான சிபாரிசை ஐ.நா மனித உரிமை ஆணையாளர் மனித உரிமைக் கூட்டத் தொடர்பில் முன்வைத்தமை தொடர்பில் கருத்துக்கூறுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

நிபுணத்துவம் வாய்ந்தவர்களால் ஆவணங்கள், சாட்சியங்கள் அனைத்தும் திரட்டப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. சர்வதேச நீதிபதிகள், வழக்கறிஞர்கள் ஆகியோரை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்ற விசாரணை தொடர்பில் ஆணையாளர் சிபார்சு செய்துள்ளார். விசாரணை அறிக்கையில் அதற்கான பொறிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. விசாரணை அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் செயல்கள், மற்றும் காணாமற்போனவர்கள் தொடர்பில் அறிதல் என்பன தொடர்பிலும் பொறிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. நீதித்துறை சார்ந்த விசாரணைக்கு சாட்சியங்கள் சொல்ல வேண்டியவர்களும், முறையிட்டாளர்கள் தங்கள் சாட்சியங்களை பதிந்துவிட்டனர்.

போர்க்குற்றம் இழைத்தவர்கள் இலங்கையில் உள்ளனர். அறிக்கையில் கூறப்பட்டுள்ள சிபார்சுகள் தொடர்பில் ஓரளவுக்கு திருப்தியடைய முடியும். விசாரணையில் விடை காணப்படாத காணாமற்போனோரின் விடயங்கள் பரிசீலிக்கப்படவேண்டும். போரால் அவலத்துக்குள்ளாகியுள்ள எமது பெண்களின் பாதுகாப்பு எதிர்காலம் பற்றியும் தீர்மானிக்கப்படவேண்டும்.

ஒரு நாட்டில் போர்க்குற்றம் இடம்பெற்றால் அந்நாட்டினாலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற ஒரு நியதியுள்ளது. அந்த விசாரணை இலங்கையின் நீதிபதிகளால் மேற்கொள்ளாது, சர்வதேச நம்பிக்கையுள்ள, நடுநிலையான நீதிபதிகளால் மேற்கொள்ளப்படவேண்டும். எதிர்வரும் 30ஆம் திகதி மனித உரிமை கூட்டத் தொடரில் அமெரிக்க ஒரு தீர்மானத்தை முன்வைக்கவுள்ளது. தீர்மானம் வரும்போது, அதன் இறுதி வடிவம் தொடர்பில் விளக்கம் வழங்க முடியும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .