2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

மருதங்கேணி கடல் நீரை நன்னீராக்கும் திட்டத்தை கைவிட தீர்மானம்

George   / 2017 ஏப்ரல் 19 , மு.ப. 08:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன், எஸ்.ஜெகநாதன்

“யாழ்ப்பாணம்,  மருதங்கேணியில் கடல் நீரை நன்னீராக்கும் திட்டமானது மேற்கொள்ளப்படுமாயின், அது அப்பகுதி மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்பது விஞ்ஞான ஆய்வுகளின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, மருதங்கேணியில் கடல் நீரை நன்னீராக்கும் செயற்றிட்டத்தை கைவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது” என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடக பேச்சாளாரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்..சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மருதங்கேணி பிரதேசத்தில் கடல் நீரை நன்னீராக்கும் செயற்றிட்டம் தொடர்பான கலந்துரையாடல்,  யாழ். மாவட்ட செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (18) மாலை இடம்பெற்றது

இந்தக் கலந்துரையாடல் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்..சுமந்திரன் கருத்து தெரிவிக்கையில், “யாழ்ப்பாணத்தின் நன்னீர் பிரச்சினையை தீர்க்கும் வகையில், மருதங்கேணி பகுதியில் கடல் நீரை நன்னீராக மாற்றுவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது.

எனினும் குறித்த செயற்றிட்டத்தை மேற்கொண்டால், அப்பகுதியில் மீன்பிடியை தமது பிரதான வாழ்வாதாரமாக கொண்டுள்ள மீனவ மக்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என, அப்பகுதி மக்கள் இத்திட்டத்துக்கு கடுமையான எதிர்ப்புக்களை தெரிவித்திருந்தனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, மருதங்கேணியில் நடைபெற்ற கூட்டத்தில் இவ்விடயம் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டு அதனூடாக பெற்றுக்கொள்ளப்படுகின்ற முடிவுகளை அடிப்படையாக கொண்டு தீர்மானத்தை எடுக்க முடியும் என அம் மக்கள் தெரிவித்திருந்தனர்.

இதனை தொடர்ந்து, ஆய்வுக்கான அனுமதி வழங்கப்பட்டதுடன்,  குறித்த செயற்றிட்டத்தை வேறு இடத்தில் மேற்கொள்ள முடியுமா என்பது தொடர்பிலும் ஆராயுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இச் செயற்றிட்டத்தை மேற்கொண்டால் இப்பகுதியில் மீன்பிடி முறைகள் நிச்சயம் பாதிப்படையும் என, இரண்டு ஆண்டுகளின் பின்னர் வெளியான ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் தற்போது உறுதியாகியுள்ளது.

கடற்பகுதியில் காணப்படும் நீரோட்டம், காலநிலை பருவபெயர்ச்சிகள், நீரோட்ட பருவ பெயர்ச்சிகள் காலத்தில்,  இந்தச் செயற்றிற்றத்தின் ஊடாக பாதிப்பு ஏற்படும். ஏனெனில், அதிகளவான நீரை உள்ளீர்த்து, பின்னர் அதிகளவான உப்பு செறிவான நீரை வெளியேற்றும் போது பாதிப்பு ஏற்படும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தச் செயற்றிட்டத்தை வேறு இடத்தில் மேற்கொள்வது தொடர்பில் ஆராயுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை  நிறைவேற்றப்படவில்லை.

இவ்வாறான நிலையில், இடைக்கால தீர்வாக கூட இச்செயற்றிட்டத்தை மருதங்கேணி  பிரதேசத்தில் மேற்கொள்ள முடியாத நிலமை காணப்படுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளதாக, மருதங்கேணியில் கடல் நீரை நன்னீராக்கும் செயற்றிட்டத்தை முற்றாகக் கைவிட வேண்டும் என்ற தீர்மானத்தை எடுத்து, அதனை யாழ். மாவட்ட செயலாளருக்கு தெரிவித்துள்ளோம்” என்றார்.

இக்கலந்துரையாடலில், யாழ். மாவட்ட செயலாளர் நா.வேதநாயகன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்..சுமந்திரன், மருதங்கேணி பிரதேச செயலாளர், மருதங்கேணி கடற்தொழிலாளர் ஒன்றியங்களின் பிரதிநிதிகள், நீர்வழங்கல் வடிகாலமைப்பு அதிகாரசபை அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .