2025 ஜூன் 30, திங்கட்கிழமை

‘மாவீரர்களை கூறுபோடுகின்றனர்’

Editorial   / 2017 நவம்பர் 26 , பி.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.என்.நிபோஜன்,  க.அகரன், நடராசா கிருஸ்ணகுமார்

“தமது இனத்தின் உரிமைகளை வென்றெடுக்கும் போராட்டத்துக்காக, தங்களுடைய பிள்ளைகளைக் கொடுத்த தாய்மார்களில் பலர், விளக்கேற்ற  முடியாத ஓலைக் குடிசைகளில், ஒருவேளை உணவுக்காகவும் ஒருவேளை  தேனீருக்காகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். மாவீரனைப் பெற்ற தாயைக்  கவனிக்காது, மாவீரனைக் கூறுபோட்டுக்கொண்டு மாவீரர் தினத்தை  நடத்துகின்றனர்” என்று, கிளிநொச்சியில்  காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களது சங்கத் தலைவி யோ.கலாரஞ்சினி தெரிவித்தார்.

“தலைவர் பிரபாகரனின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்கோ அல்லது, மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கோ நல்லாட்சி அரசாங்கம் அனுமதி வழங்கியிருக்கிறது என்றால், இங்கு நல்லாட்சி நடக்கிறது என்பதை சர்வதேசத்துக்குக் காட்டுவதற்கே ஆகும். இவ்வாறான அரசாங்கத்துக்கு, சர்வதேச ரீதியில் நற்பெயரை ஏற்படுத்துவதற்கே, அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு மாவீரர் நாளை நடத்துகின்றன” என்றும் அவர் குறிப்பிட்டார். 

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில், இன்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரைத்த அவர், “2009ஆம் ஆண்டுக்கு முன்னர் எவ்வாறு மாவீரர் நாள் நடத்தப்பட்டதோ, எந்தளவு புனிதத்தன்மையோடு அனுஷ்டிக்கப்பட்டதோ, அந்த நிலைமை தற்போது இல்லை. வடக்கின் பல பகுதிகளிலும், அரசியல் கட்சிகளும் பொது அமைப்பினரும், ஏற்பாட்டுக் குழுக்களும் இணைந்து, மாவீரர் தினத்துக்கான ஏற்பாடுகளில்  தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன” என்றார்.  

 விடுதலைப் போராட்டத்தில் மரணித்த விடுதலைப் புலிகளின் நினைவாகவே, நவம்பர் 27ஆம் திகதியன்று மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வந்தது. 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னர், பெரியளவில் மாவீரர் தின நிகழ்வுகள் இடம்பெறவில்லை. இந்நிலையில், இம்முறை மிகவும் சிறப்பாக மாவீரர் தினத்தை முன்னெடுக்க ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. 

“யாழ்ப்பாணத்தின் கோப்பாய், சாட்டி, உடுத்துறை, தீருவில், யாழ். பல்கலைக்கழகம் ஆகிய இடங்களிலும் கிளிநொச்சியில் கனகபுரம், முழங்காவில் ஆகிய பகுதிகளிலும், மன்னார் மாவட்டத்தில் ஆட்காட்டிவெளியிலும், வவுனியாவில் ஈச்சங்குளத்திலும், முல்லைத்தீவில் வன்னிவிளாங்குளம், முள்ளியவளை, அளம்பில், தேராவில், இரணைப்பாலை, முள்ளியவாய்கால், கயட்டை, ஆலங்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள துயிலும் இல்லங்களில் நடைபெறவுள்ளதுடன், இராணுவத்தின் வசமுள்ள துயிலும் இல்லங்களின் முன்பாகவும் இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. 

மாவீரர் தின ஏற்பாடுகள் அனைத்தும் முழுமை பெற்றுள்ள நிலையில், வழக்கம் போலவே இன்று (27) மாலை 6.02 மணிக்கு மணிஒலி எழுப்பப்பட்டு, 6.05க்கு ஈகைச்சுடரேற்றல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதனைத் தொடர்ந்து, மாவீரர் நாள் பாடல் ஒலிக்கவிடப்படும். இதற்கான ஏற்பாடுகளை அந்தப் பகுதிகளில் உள்ள மாவீரர் துயிலும் இல்லப் பணிக்குழுக்கள் ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X