2025 ஜூன் 21, சனிக்கிழமை

முள்ளிவாய்க்கால் நினைவாலயத்தைஅமைப்பதற்கான தடை நீங்கியது

Editorial   / 2018 ஏப்ரல் 22 , பி.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.நிதர்ஷன்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில், முள்ளிவாய்க்கால் நினைவாலயமொன்றை அமைப்பதற்கு ஏற்பட்ட தடை, மாணவர்களுக்கும் நிர்வாகத்துக்கும் இடையே ஏற்பட்ட இணக்கப்பாட்டுடன் நீங்கியது என, தற்போது அறிவிக்கப்படுகிறது.

வன்னி இறுதிப் போரின்போது உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்கள், உறவுகள் உட்பட, முள்ளிவாயக்கால் பேரவலத்தை நினைவுகூர்வதற்கு, நினைவாலயமொன்றை அமைக்க, பல்கலைக்கழக மாணவர்கள் திட்டமிட்டனர்.

இதற்கமைய, இதற்கான பணிகளை பல்கலைக்கழக வளாக முன்றலில், கடந்த புதன்கிழமை (18) ஆரம்பித்திருந்தனர். எனினும், அந்த இடத்தில் நினைவாலயம் அமைப்பதற்கு பல்கலைக்கழக நிர்வாகத்தின் பணிப்புரையையடுத்து, தடை விதிக்கப்பட்டது.

இதையடுத்து, உயர்மட்டத்துக்கும் மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளுக்கும் இடையே, பல்கலைக்கழக நிர்வாகத்தில், கடந்த வியாழக்கிழமை பிற்பகல் பேச்சுவார்த்தை இடம்பெற்றது எனத் தெரிய வருகிறது.

இதன்போது, போரில் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், முள்ளிவாய்க்கால் நினைவாலயம் அமைக்க நிர்வாகம் தடையில்லை எனவும், அதனை பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாவீரர் நினைவிடத்துக்கு அருகாமையில் அமைக்குமாறும், உயர்மட்டத்தினரால், மாணவர் ஒன்றியத்திடம் கோரப்பட்டது.

பல்கலைக்கழக நிர்வாகத்தின் கோரிக்கையைப் பரிசீலனை செய்த மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள், அதற்கு இணக்கம் தெரிவித்தனர்.

இந்நிலையில், பல்கலைக்கழக வளாகத்தில் நிர்வாகத்தால் அடையாளம் காட்டப்பட்ட இடத்தில், வியாழக்கிழமை (19) தொடக்கம், முள்ளிவாய்க்கால் நினைவாலயம் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

யாழ். பல்கலைக்கழக பொங்குதமிழ் எழுச்சி நினைவகம் அமைக்கும் பணிகள் நிறைவடையும் நிலையில், முள்ளிவாய்க்கால் நினைவாலயம் அமைக்கும் பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

இதற்கமைய, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு, எதிர்வரும் மே 18ஆம் திகதி, யாழ். பல்கலைக்கழக வளாகத்துக்குள், முள்ளிவாய்க்கால் நினைவாலயத்தில் மாணவர்களால் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .