2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

மீள்குடியேற்ற விவகாரம்: தாமதம் ஏற்பட்டாலும் முடிவில் மாற்றமில்லை

Princiya Dixci   / 2016 ஜூன் 06 , பி.ப. 08:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன்

'யாழ்ப்பாணம், உயர்பாதுகாப்பு வலயத்துக்குட்பட்ட மயிலிட்டி பிரதேசம் தொடர்பில், இராணுவத்தினர் இதுவரையில் தமது எதிர்ப்பினையோ அல்லது காணி விடுவித்தல் தொடர்பான மற்றுப்பினையோ முன்வைக்கவில்லை. வடக்கின் மீள்குடியேற்றம் தொடர்பில் நான், கடும் சிரத்தையுடன் இருக்கின்றேன். வடக்கு மக்களுக்கு மீள்குடியேற்றம் தொடர்பாக வழங்கப்பட்ட வாக்குறுதிகளில் எந்த மாற்றமும் இல்லை. சிலவேளைகளில் சிறிய தாமதம் ஏற்படலாம்' என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தன்னிடம் கூறியதாக, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர், அங்கஜன் இராமநாதன் கூறினார்.

அத்துடன், 'நீண்ட காலப் போர் நடைபெற்ற பிரதேசங்களாய் அவை காணப்படுவதால், அக்காணிகளைத் துப்பரவு செய்து, பாதுகாப்பாக மக்களுக்கு கையளிக்க வேண்டியது எனது பொறுப்பாகும். அதன் காரணமாகவே சிறிது தாமதம் ஏற்படுகிறது' என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியதாக அங்கஜன் கூறினார்.

மயிலிட்டி பிரதேசத்தை விடுவிக்க, இராணுவத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக, அண்மையில் வெளியான செய்தி தொடர்பில், ஜனாதிபதியுடன் தான் கதைத்ததாகவும், இதன்போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு உறுதியளித்ததாகவும் அங்கஜன் இராமநாதன் கூறினார்.

இது தொடர்பான ஊடக அறிக்கையொன்றை விடுத்துள்ள அங்கஜன், 'மயிலிட்டி மற்றும் தையிட்டி போன்ற பிரதேசங்களிலிருந்து குடிபெயர்ந்த மக்கள், தம் சொந்த நாட்டில் அகதிகளாகவும் இரண்டாவது தலைமுறையாகவும் வாழத்தொடங்கி விட்டனர். இதனால் அவர்கள், உணர்வு ரீதியாக இழந்தவை ஏராளம். அதை நான் நன்கு உணர்வேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், 'இந்த மக்களுக்கு தம் சொந்த நிலங்களில் வாழும் நிலையை எப்படியேனும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று தொடர்ந்தும் முயற்சித்து வருகிறேன். மயிலிட்டி, தையிட்டி மற்றும் ஏனைய பிரதேச மக்கள், தம் சொந்த நிலங்களில் குடியேறும் வரைக்கும் தொடர்ந்து ஜனாதிபதிக்கு அலுத்தங்களைக் கொடுத்துக்கொண்டிருப்பேன். அதனால், மக்கள் யாரும் வீணாகக் கவலைகொள்ளத் தேவையில்லை' என்று இராமநாதன், தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X