2025 ஜூன் 28, சனிக்கிழமை

’வடக்கில் எவருக்கும் கொரோனா இல்லை’

Editorial   / 2020 மார்ச் 17 , மு.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

வடக்கு மாகாணத்தில், இதுவரை எந்தவொரு நபரையும் கொரோனா வைரஸ் தாக்கவில்லையென்று, வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஏ.கேதீஸ்வரன் தகவல் தெரிவித்தார்.

இருப்பினும் குறித்த வைரஸ் தொடர்பில், பொது மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டுமென்றும், அவர் அறிவுறுத்தியுள்ளார்.

யாழ்., பண்ணைப் பகுதியில் உள்ள வடமாகாண சுகாதார சேவைகள் பணிமனையில், நேற்று (15) பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்துத் தொடர்ந்துரைத்த அவர், கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக, தற்பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் இம்முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பில் நடந்த கலந்துரையாடலில், பொது மக்களுக்கான சில அறிவுறுத்தல் கொடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இதன்படி, இங்கிருந்து வெளிநாடுகளுக்கு பயணம் செய்யவுள்ள மக்கள் தமது பயணத்தை தவிர்க்க வேண்டுமெனத் தெரிவித்த அவர், வெளிநாடுகளில் இருந்து இங்கு வர விருப்வவர்களும் தமது பயணத்தை பிற்போடுமாறும் வலியுறுத்தினார்.

வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் தொடர்பில், அந்தந்தப் பகுதி குடும்பநல உத்தியோகஸ்தருக்கு அறிவிக்க வேண்டுமெனத் தெரிவித்த அவர், பொது மக்கள் ஓர் இடத்தில் ஒன்றுகூடுவதைத் தவிர்க்க வேண்டுமெனவும் கூறினார்.

குறிப்பாக, விளையாட்டு போட்டிகள், கலை, கலாசார, சமய நிகழ்வுகள், ஏனைய கலந்துரையாடல்கள், கூட்டங்களையும் பிற்போடுமாறும் அல்லது தவிர்க்குமாறு கோரப்பட்டுள்ளதெனவும், அவர் தெரிவித்தார்.

அறிவுறுத்தலை மீறியும் ஏற்பாடு செய்யப்பட்டாலும், பொது மக்கள் கலந்து கொள்ள வேண்டாமெனவும், அது தொடர்பில் முறையிடலாமெனவும் தெரிவித்தார்.

“மேலும், குடும்ப நிகழ்வுகள் அதாவது திருமணம், பிறந்த தினம் போன்ற நிகழ்வுகளை பிற்போட வேண்டும். இல்லாவிட்டால் குடும்பத்துக்கு நெருங்கிய உறவினர்களுடன் மட்டுப்படுத்தப்பட்ட ஆட்களுடன் அந்த நிகழ்வுகளை முடித்துக் கொள்ள வேண்டும்.

“அது மட்டுமல்லாமல், ஒவ்வொருவரும் தனிநபர் சுகாதாரத்தைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும்” என்றார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .