2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

வடமாகாண போக்குவரத்து அமைச்சரின் உருவ பொம்மை எரிப்பு

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 04 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியர்களால் வியாழக்கிழமை (02) முதல், வடமாகாணம் முழுவதும் முன்னெடுக்கப்படுகின்ற காலவரையறையற்ற பணிப்பறக்கணிப்பையடுத்து யாழ்.மத்திய பஸ் நிலையத்தில் வைத்து நேற்று (03) மதியம்  வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரனின் உருவப் பொம்மை, இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியர்களினால் எரிக்கப்பட்டது.
 
இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியர்களால் மேற்கொள்ளப்படுகின்ற போராட்டம், அர்த்தமற்றது எனவும் இவ்வாறு பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுபவர்களை பதவியில் இருந்து நீக்கப் போவதாகவும் வடமாகாண போக்குவரத்து அமைச்சர் தெரிவித்திருந்தார்.
 
இதனையடுத்து, டெனிஸ்வரனின் உருவ பொம்மையினை பஸ்ஸில் தொங்கவிட்டவாறு கோண்டாவில் டிப்போவில் இருந்து தமது ஊர்வலத்தினை ஆரம்பித்த இ.போ.ச ஊழியர்கள், யாழ். மத்திய பஸ் நிலையத்தினை அடைந்து அங்கு, ஒப்பாரி வைத்தும்,  முட்டி உடைத்து, வாய்க்கு அரிசி போட்டும், உருவப் பொம்மைக்கு பெற்றோல் ஊற்றி எரித்தனர்.
 
அதன்பின்னர், தமக்குரிய பதில் கிடைக்காவிடின் தொடர்ந்தும் போராட்டம் தொடருமென்றும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
 
இதன்போது, சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், மாவட்டச் செயலாளர் நாகலிங்கன் வேதநாயகன், வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே ஆகியோருக்கு மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது.
 
இலங்கை போக்குவரத்துச் சபையின் சாரதிகள் தொடர்ச்சியாக தாக்கப்படுவதை கண்டித்தும், தமது பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரியும், வவுனியா பழைய பஸ் நிலையத்தில் இருந்தே வழமை போன்று இலங்கை போக்குவரத்துச் சபையின் சேவைகள் இடம்பெற வேண்டும் எனவும் தெரிவித்தும் வட மாகாணம் முழுவதும் இலங்கை போக்குவரத்துச் சபையின் சாரதிகள் வியாழக்கிழமை (02) காலவரையறையற்ற பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X