2025 மே 22, வியாழக்கிழமை

‘வைத்தியர்களுக்கான மேலதிக கொடுப்பனவை மத்திய அரசு வழங்க வேண்டும்’

எஸ்.றொசேரியன் லெம்பேட்   / 2018 மே 10 , பி.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

“வடமாகாணத்தில் கடமையாற்றுகின்ற அரச வைத்தியர்களுக்கான மேலதிக நேர கொடுப்பனவுகள் பல மாதங்களாக வழங்கப்படாத நிலை காணப்படுவதாகவும், குறித்த கொடுப்பனவுகளை வழங்க மத்திய அரசு நிதி ஒதுக்கீட்டினை உடனடியாக மாகாண திறைசேரிக்கு வழங்க வேண்டும் எனவும்” வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் தெரிவித்தார்.

வடமாகாண அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் வைத்தியர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை அடையாள பணிப்பகிஸ்கரிப்பு ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் வடமாகாண சுகாதார அமைச்சரை தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“எதிர்வரும் 14 ஆம் திகதி திங்கட்கிழமை வடமாகாண அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் வைத்தியர்கள் அடையாள பணிப்பகிஸ்கரிப்பு ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

ஜனவரி மாதத்தில் இருந்து அவர்களுக்கான மேலதி நேர கொடுப்பணவுகளுக்கான வீதங்கள் அதிகரிக்கப்பட்டிருந்தது. அதிகரிக்கப்பட்ட வீதத்தின் அடிப்படையில் மேலதிக நேரக் கொடுப்பனவுகள் இது வரை அவர்களுக்கு வழங்கப்படவில்லை.பழைய வீதத்திலேயே அவர்களுக்கான கொடுப்பனவுகள் வழங்கப்பட்டிருந்தது.

மத்திய அரசில் இருந்து மாகாண திறைசேரிக்கு பழைய வீதத்திலான கொடுப்பனவுகள் வழங்குவதற்கே எமக்கு நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டிருந்தது. புதிய வீதத்தின் அடிப்படையில் மேலதிக கொடுப்பனவுகளை வழங்குவதாக இருந்தால் மொத்தமாக 280 மில்லியன் ரூபாய் தேவைப்படுகின்றது. இவ்விடயம் தொடர்பாக வடமாகாண வைத்திய அதிகாரிகள் சங்கம் என்னுடன் ஏற்கனவே கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தனர்.

இவ்விடயம் தொடர்பில் மாகாண திறைசேரி, பிரதம செயலாளர் மற்றும் பிரதி பிரதம செயலாளர் ஆகியோருடன் கலந்து ஆலோசித்த போது, தற்போது மாகாண திறைசேரியில் இருந்து வழங்குவதற்கான நிதி மாகாண திறைசேரியிடம் இல்லை.

மாகாண திறைசேரியினால் மத்திய நிதி அமைச்சுக்கு குறித்த விடயம் தெரியப்படுத்தப்பட்டு மத்திய திறைசேரியிடம் இருந்து இதற்கான நிதியை ஒதுக்கித்தருமாறு கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதோடு, நேரடியாகவும் மாகாண பிரதி பிரதம நிதி செயலாளர் கொழும்பு சென்று இவ்விடையம் தொடர்பாக முயற்சிகளை மேற்கொண்டிருந்தார்.

நாங்களும் நிதியை பெற்றுக்கொள்ள தொடர்ச்சியாக அழுத்தங்களை கொடுத்தோம். ஆனாலும் மேலதிக நேரக் கொடுப்பணவை வழங்குவதற்கு நிதி இன்னும் எங்களுக்கு வழங்கப்படாமல் இருக்கின்றது. ஆகவே நிதி அமைச்சில் இருந்து இதற்கான நிதியை பெற்று மாகாண திறைசேரியூடாக மேலதிக கொடுப்பணவை வழங்க வேண்டும். தொடர்ச்சியாக அதற்கான அழுத்தத்தை கொடுத்து வருகின்றறோம்.

எதிர்வரும் திங்கட்கிழமை மத்திய சுகாதார அமைச்சருக்கும் மாகாண சுகாதார திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம் பெறவுள்ளது. இதன் போது குறித்த விடயங்கள் அங்கே வழியுறுத்தி கூறப்படும்.

இந்த நிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை 14 ஆம் திகதி வடமாகாண வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் வைத்தியர்கள் அடையாள பணிப்பகிஸ்கரிப்பு ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

குறித்த அடையாள பணிப்பகிஸ்கரிப்பின் காரணமாக வைத்திய சேவைகள் பாதிப்படைவதற்கான வாய்ப்புக்கள் உள்ளது.

மத்திய அரசு உடனடியாக குறித்த நிதியை வழங்கி வைத்தியர்களின் மேலதிக நேர கொடுப்பணவை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X