2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

'அரசியல்வாதிகளால் வடக்கு வரும் பணம் திரும்பி செல்கிறது'

Gavitha   / 2017 ஜனவரி 18 , மு.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஸ்ணகுமார்

'அரசியல்வாதிகளிடம் காணப்படும் பிரச்சினைகளால், வடக்குக்கு வரும் பணம் திரும்பி செல்கிறது' என்று வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே தெரிவித்தார்

சிவில் பாதுகாப்பு  திணைக்களத்தின் முல்லைத்தீவு  மற்றும்  கிளிநொச்சிக்கான, இணைந்த  கட்டளைத்  தலைமையகத்தின் ஏற்பாட்டில், வட்டக்கச்சியில் நேற்று நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

'அரசியல்வாதிகளுக்குள் இருக்கும் பிரச்சினைகளால், வட மாகாணத்துக்கு வரும் பணம்,  செலவழிக்கப்படாமல் திரும்பிச்செல்கின்றது. குறிப்பாக, இரணைமடுவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு குடி தண்ணீர்  கொண்டுச் செல்வதற்கு மிகப்பெரிய  தொகைப்பணம் வந்தது.  ஒரு பயனும் இல்லை.  அதுமட்டுமல்ல  மாங்குளம்  பகுதியில்  பொருளாதார  மத்திய நிலையம்  ஒன்றை நிறுவுவதற்கும் பணம் வந்தது. அதுவும் ஒன்றும் செய்யாமல் திரும்பிச் சென்றது.

வாக்குவாதங்கள்  இல்லாது அனைவரும் சேர்ந்து  மக்களுக்கு வேலைசெய்ய வேண்டும்.  நான்  இனவாத  அரசியல்  செய்யவில்லை.  நாம் இன மத கட்சி வேறுபாடின்றி இணைந்தால், இந்த நாட்டை அபிவிருத்தி நோக்கி கொண்டுசெல்லமுடியும்.  

இராணுவத்தினர் கூட புனரமைப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பொழுது உள்ள இராணுவம் யுத்ததுக்கானது அல்ல. பொலிஸாரும் அவ்வாறே. அனைவரும் மக்களுக்கானவர்கள். அதேபோல் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும். அதுவே நல்லிணக்கம்' என்று அவர் தெரிவித்தார்.

அத்துடன் சிவில்ப்பாதுகாப்புத் திணைக்களத்தில் வேலைசெய்யும் தாய்மார்களது     குழந்தைகளை பராமரிப்பதற்கான பராமரிப்பகத்தை அமைக்க, தனது சொந்தப்பணத்தில் இருந்து  இரண்டு இலட்சம் ரூபாய் தருவதாகவும்  இதன்போது உறுதியளித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X