2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

'இனவாத செயற்பாடுகள் தலைதூக்க அனுமதிக்கக்கூடாது'

Princiya Dixci   / 2016 ஜூன் 27 , மு.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் மீண்டும் இனவாத செயற்பாடுகள் தலைதூக்க இந்த அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்கக் கூடாது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள செயலாளர் நாயகம்,

'கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்டிருந்த பல்வேறு இனவாதச் செயற்பாடுகள் காரணமாக எமது சமூகங்களுக்கிடையில் பரஸ்பர நல்லிணக்கம் என்பது வெகுவாகப் பாதிக்கப்பட்ட ஒரு நிலையையே நாம் காணக்கூடியதாக இருந்தது.

'இந்த நாட்டில் அனைத்து சமூகங்களுக்கிடையிலும் நிலையான - சுமுகமான உறவுகள் உறுதிப்படுத்தப்படுவதன் ஊடாகவே இந்த நாட்டில் தேசிய நல்லிணக்கத்தை எம்மால் கட்டியெழுப்ப முடியும்.

'தேசிய நல்லிணக்கத்தை பலமிக்கதாகக் கட்டியெழுப்புவதன் ஊடாகவே எமது நாட்டின் தேசிய பிரச்சினைக்கான நிரந்தரமான தீர்வை எட்ட முடியும். எனவே, அதற்கான பாதையில் நாம் எமது பயணத்தைத் தொடரவேண்டியுள்ள நிலையில், குறுகிய இனவாத செயற்பாடுகள் அதனைப் பெரிதும் பாதிப்பதாகவே அமையும்.

'கடந்த காலத்தில் இனவாத செயற்பாடுகள் நிலவியதாக பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட நிலையிலேயே ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, புதிய அரசு ஆட்சிபீடமேறியது. இவ்வாறான நிலையில் இனவாத செயற்பாடுகள் தொடருமானால் அதனை எமது மக்கள் தொடர்ந்தும் சகித்துக் கொள்ளப் போவதில்லை.

'இவ்வாறான இனவாதப் போக்குகளை எமது நாட்டிலிருந்து துடைத்தெறிய வேண்டும் என்ற எமது தூர நோக்கம் காரணமாகவே, இனவாதத்தைத் தூண்டும் செயற்பாடுகளை மேற்கொள்வோர்மீது சட்ட நடவடிக்கை எடுத்து, அவர்களை தண்டனைகளுக்கு உட்படுத்தும் வகையில் ஓர் ஆணைக் குழு அவசியம் தேவை என்பதை 19வது அரசியலாப்பு சீர்திருத்தத்தின்போது நாம் வலியுறுத்தியிருந்தோம்.

'எனவே, இனவாத செயற்பாடுகள் தொடர்பில் இந்த அரசு அதிக அவதானம் செலுத்தி செயற்படுவது அவசியம்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X