2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

'மருதங்கேணி நன்னீர் செயற்றிட்டத்தால் பாதிப்புக்கள் இல்லை'

George   / 2017 ஏப்ரல் 20 , மு.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

“யாழ்ப்பாணம், மருதங்கேணி தாழையடி கடற் பிரதேசத்தில் கடல் நீரை நன்னீராக்கும் செயற்றிட்டத்தை முன்னெடுப்பதால் சூழலுக்கு எதுவித பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. இத் திட்டத்தால் மீன் வளம் பெருகும்” என, இச்செயற்றிட்டத்தின் விளைவுகள் தொடர்பாக ஆராய்ந்த “நாரா” நிறுவனத்தின் சமூத்திரவியல் ஆய்வு பிரிவின் தலைவர் கலாநிதி கே.அருளானந்தம் தெரிவித்துள்ளார்.

யாழில், புதன்கிழமை (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “யாழ்ப்பாணத்தில் நன்னீர் பிரச்சினையை தீர்க்கும் வகையில் மருதங்கேணி, தாழையடி கடற் பிரதேசத்தில் கடல் நீரை நன்னீராக்கும் திட்டத்தை முன்மொழிந்திருந்தார்கள். இத்திட்டத்தினூடாக நாளொன்றுக்கு 25ஆயிரம் கியூபிக் மீற்றர் நீரை உற்பத்தி செய்து, குடாநாட்டின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணலாம் என முன்மொழியப்பட்டிருந்தது.

அந்தவகையில், இத் திட்டம் தொடர்பில் கடல் நுண்ணுயிர்களின் உருவாக்கல், கடல் நீரோட்டத்தின் மாற்றங்கள், கடல் அடிப்படுக்கைகளின் தன்மை போன்ற விடயங்கள் தொடர்பாக எனது தலமையிலான குழுவினர் நேடியாக ஆய்வுகளை மேற்கொண்டனர்.

ஆய்வுகளின் போது, குறித்த கடற்பகுதியில் தொழிலில் ஈடுபடும்  மீனவர்கள், மூன்று பிரச்சினைகளை சுட்டிக்காட்டி,  இத் திட்டத்தால் பாதிப்பு ஏற்படும் என கூறியிருந்தனர்.

மக்கள் குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பாகவும் நாம் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக ஆய்வுகளை முன்னெடுத்தோம்.

இலங்கையின் கிழக்கு கரையோரத்தின் வங்காள விரிகுடா மற்றும் அரேபிய கடலுக்கும் இடையில் நீர் பரிமாற்றத்துக்கான நீரோட்ட பாதையாகவே இவ்தாழையடி கடற்பகுதி காணப்படுகின்றது. இங்கு பருவகால மாற்றங்களின் போது நீரின் தன்மையில் மாற்றங்கள் ஏற்படும்.

சில காலங்களில், நீரோட்ட திசைகள் கூட மாற்றமடைவதை எமது ஆய்வில் கண்டறிந்திருந்தோம். இச் சந்தர்ப்பங்களில் நீரின் உப்பு தன்மையின் அளவானது மாற்றமடைந்தே இருக்கும்.

சுத்திகரிப்பு ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் உப்பு செறிவான நீர்,  22 மீற்றர் தூரத்திற்கே தாக்கத்தை செலுத்தும். இவ் உப்பு தன்மை கூடிய நீரானது இரண்டு அலகாக காணப்படும். ஆனால், கடலில் பருவகாலத்தில் ஏற்படுகின்ற மாற்றத்தால் உப்பு தன்மையின் அளவின் மாற்றமானது ஆறு அலகாக காணப்படும்.

கிழக்கு கரையோர கடலானது உற்பத்தி திறன் அதிகமாகவுள்ளதன் காரணம் அங்கே வெவ்வேறான கடல் நீரானது கலப்பதாலேயே அக் கடலானது அதிகளவு உற்பத்தி திறன் வாய்ந்ததாக உள்ளது.  இருவேறான கடல் நீர் கலக்கின்ற முனைகளிலே அதிகளவான மீன் வளம் காணப்படும்.

அதேபோன்று, இங்கேயும் சுத்திகரிப்பு ஆலையில் இருந்து சற்று கூடிய உப்பு தன்மையான நீர் வெளியேற்றப்படும் போது, அதற்கு அண்மையாக உப்பு தன்மை குறைந்த நீரும் சேரும் போது இங்கேயும் மீன்வளமானது செழிப்பானதாக இருக்கும்.

கடல் நீரை உள்ளீர்க்கும் மற்றும் வெளியேற்றும் குழாய்களானது கடல் அடிப்படுக்கையை ஆழமாக தோண்டி அவற்றின் கீழேயே பதிக்கப்பட வேண்டும் என ஆய்வில் கூறப்பட்டுள்ளது.  கடல் நீரை உள்ளீர்ப்பதற்கு இயந்திர பம்புகளை நாம் பயன்படுத்த போவதில்லை என ஆய்வில் குறிப்பிட்டுள்ளோம்.

இயற்கையான புவியீர்ப்பு சக்தியை மாத்திரம் பயன்படுத்தியே இவ் கடல் நீரானது உள்ளீர்க்கப்படவுள்ளது. எனவே மக்கள் முன்வைத்த மூன்று பிரச்சனைகளுக்கும் பாதிப்பு ஏற்படபோவதில்லை.

அபிவிருத்தி வேலைத்திட்டம் இடம்பெறும் போது சூழலில் மாற்றம் ஏற்படும். அவ் மாற்றமானது தாக்கமல்ல. கடல் நீரை நன்னீராக்கும் செயற்திட்டமானது முன்னெடுக்கப்படுவதனூடாக சூழலுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லையென்பதை எனது 25 வருடகால துறைசார் அனுபவத்தின் அடிப்படையில், உறுதியாக என்னால் கூற முடியும்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .