2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

வடமாகாண கல்வி அமைச்சுக்கு எதிராக ‘இன்று முதல் தொடர் போராட்டம்'

Niroshini   / 2017 பெப்ரவரி 12 , மு.ப. 09:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.நிதர்ஸன்

“வடமாகாண கல்வியமைச்சினால், ஆசிரியர்கள் மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் அநீதிகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை, இன்று முதல் வடமாகாண கல்வியமைச்சின் செயலாளர் அலுவலகத்துக்கு முன்னால், காலை 9.00 மணி முதல் தொடர்போராட்டம் ஒன்றை இலங்கை ஆசிரியர் சங்கம் நடத்தவுள்ளது” என,  இலங்கை ஆசிரியர் சங்க உபதலைவர் தீபன் திலீசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,

"கடந்த மாதம் 10ஆம் திகதி, தமது வெளிமாவட்ட சேவை நிபந்தனைக் காலத்தைப் பூர்த்திசெய்த ஆசிரியர்களால் நடத்தப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டத்தில் பங்குகொண்ட ஆசிரியர்களை அச்சுறுத்தும் வகையில், செயலாளரைத் தாக்கியதாக பொய்யான குற்றச்சாட்டுகளை வடமாகாணக் கல்விப் பணிப்பாளர் சுமத்தினார். இதன் அடிப்படையிர் இது தொடர்பான விசாரணைகள் எதுவுமின்றி மூன்று ஆசிரியர்களுக்கு பணித்தடை வழங்கப்பட்டது. ஆனால்,  இன்று வரை, அந்த ஆசிரியர்களை மீள இணைத்துக் கொள்வது தொடர்பில் எவ்விதமான நடவடிக்கைகளையும் வடமாகாண கல்வியமைச்சு மேற்கொள்ளவில்லை.

"இவ்விடயம் தொடர்பாக  வடமாகாண முதலமைச்சரின் கவனத்துக்கு கவனயீர்ப்பு போராட்டம் மூலமாக கொண்டுவந்திருந்த போது, அதற்கான பதிலை, கடந்த திங்கட்கிழமை வழங்குவதாகக் கூறப்பட்டது. இருப்பினும் இது தொடர்பில் முதலமைச்சரின் செயலகம், எவ்விதமான சாதகமான பதிலையும் வழங்கவில்லை.

"வடமாகாண கல்வியமைச்சின் செயலாளரால் பொலிஸில் மேற்கொண்டிருந்த முறைப்பாட்டில் கூட, செயலாளரால் குற்றங்களை நிரூபிக்க முடியாத நிலையில் சமரசத்தில் முடிந்துள்ளது.

"பொலிஸாரின் முறைப்பாட்டில் தன்னைத் தாக்கியதாக முறைப்பாடு செய்த ஆசிரியரின் பெயர் தவறானது எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. அப்படியாயின்  அந்த ஆசிரியருக்கு ஏன் பணித்தடை வழங்கப்பட்டது?

"அதேவேளை, குறித்த மூன்று ஆசிரியர்களும் அலுவலகத்தில் தன்னை சந்தித்தபோது தாக்க முயன்றதாக, செயலாளர் குறிப்பிட்டிருந்தார். ஆனால், அம்மூவரில் ஓர் ஆசிரியரே, செயலாளருடனான சந்திப்பில் கலந்துகொண்டதாக விசாரணையின் போது ஆசிரியர்களால் குறிப்பிடப்பட்டிருந்தது. அப்படியாயின் மற்றைய இருவருக்கும் ஏன் வடமாகாணக் கல்விப் பணிப்பாளரால் பணித்தடை வழங்கப்பட்டது? 

"இதேவேளை, வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் தவராசா, செயலாளரின் சட்டையை ஆசிரியர்கள் பிடித்தனர் என ஆதாரமற்ற பொய்யான குற்றச்சாட்டை வடமாகாண சபையில் முன்வைத்துள்ளார்.

"எனவே, வடமாகாண கல்வியமைச்சினால் ஆசிரியர்கள் மட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும்  அநீதிகளுக்கெதிரான போராட்டமாக தீர்வு கிடைக்கும் வரையான தொடர்போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளோம். இதில் அனைத்து ஆசிரியர்களையும் ஒன்றிணைந்து பலம் சேர்க்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்” எனத் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X