2025 ஜூன் 25, புதன்கிழமை

இந்திய மீனவர்களின் இழுவைப் படகுகளினால் 750 மில்லியன் டொலர் வருமானம் இழப்பு

Kogilavani   / 2014 ஜனவரி 15 , பி.ப. 01:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமித்தி தங்கராசா, எஸ்.ஜெகநாதன்

இந்திய இழுவைப்படகுகள் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்து வருவதால் ஒருவருடத்தில் எழுநூற்று ஐம்பது மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை இழக்கும் நிலை இலங்கை மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ளதாக தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் தேசிய அமைப்பாளரும் உலக மீனவ சம்மேளத்தின் சிறப்புப் பிரதிநிதியுமான ஹேர்மன் குமார இன்று (15) தெரிவித்தார்.

யாழில் அமைந்துள்ள வடமாகாண கடற்றொழிலாளர்களின் இணைய வளாகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்திய இழுவைப் படகுகளினால் வடபுலத்து மீனவர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் மற்றும் இந்தியாவில் நடைபெறும் பேச்சுவார்த்தை தொடர்பாக ஊடக சந்திப்பு நடைபெற்றது.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது,

'2002 ஆம் ஆண்டில் இடம்பெற்ற சமாதான நடவடிக்கைக்கு பின்னர் வடபுலத்து மீனவர்களுடன் இணைந்து அவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பாகவும் செயற்படுகின்றோம். தொடர்ந்து இன்றும் செயற்பட்டு வருகின்றோம்.

2004 ஆம் ஆண்டு தொடக்கம் இவ்வாறான கலந்துரையாடலில் பங்குகொண்டு வருகின்றோம். 2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நாங்கள் இந்தியா சென்று மீனவர் பிரதிநிதிகளுடன் பேச்சுக்களில் ஈடுபட்டு முடிவுக்கு வரக்கூடியதாக இருந்தது.

2010ஆம் ஆண்டு சென்றபோது இராமேஸ்வரம் தொடக்கம் நாகபட்டிணம் வரையான கரையோரப் பிரதேசங்களின் மக்களைச் சந்தித்து உண்மையான நிலைப்பாடுகளை தெளிவுபடுத்தி ஒரு முடிவுக்கு வந்திருந்தோம்.

எந்தவித காரணத்தைக் கொண்டும் இந்திய இழுவைப்படகுகள் சட்டவிரோதமான முறையில் இலங்கை கடற்பரப்பிற்குள் உட்பிரவேசிக்கக் கூடாதென 2011 ஆகஸ்ட் 31 அன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

பேச்சுவார்த்தைகளின் முடிவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்த ஆவணங்களை கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சின் பணிப்பாளர் பத்திரணவிடம் கையளித்தோம்.

ஆனால் இலங்கை அரசாங்கம், எந்தவிதக் காரணத்தையும் கொண்டும் மீனவர்களுடைய கலந்துரையாடலினூடாக எடுக்கப்படுகின்ற முடிவுகளை நாங்கள் கவனத்தில் எடுக்கமாட்டோம். அத்துடன், தாம் (இலங்கை அரசாங்கம்) அதற்கான முடிவுகளை எடுப்போம் என்று தெரிவித்திருந்தது.

நாங்கள் அப்பொழுது எடுத்த முடிவை இந்த அரசாங்கம் தற்போது எடுத்திருக்கின்றது. மீனவர்களுக்கிடையிலான கலந்துரையாடல் மூலமாகத்தான் இந்தப் பிரச்சினைக்கான சரியான ஒரு முடிவினை நோக்கிச் செல்ல முடியும்.

மீனவர்களுடன் கலந்துரையாடி முடிவெடுக்குமாறு நாங்கள் அன்றே சொல்லியிருந்த விடயத்தினை செவிமடுத்திருந்தால் தற்போது இந்நிலை ஏற்பட்டிருக்காது.

தற்போதைய கலந்துரையாடல் (புது டில்லி) தொடர்பில் நாங்கள் மகிழ்வடைகின்ற அதேவேளை கவலையும் அடைகின்றோம். பல வருடங்களாக இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முன் நின்று உழைத்த பல மீனவர் சங்கத்தலைவர்கள் இருக்கிறார்கள்.

அவர்களுக்கு பலகால அனுபவங்கள் உள்ளன. இதனால் அவர்களிடம் இருந்து ஆலோசனைகளைப் பெற்றிருக்கலாம்.
அவர்களை ஒருபக்கம் ஒதுக்கிவைத்துவிட்டு புதிய குழுக்களை வைத்து பேச்சுக்களில் ஈடுபடுவது கவலைக்குரிய விடயமாகும்.

புதிய குழுவை பேச்சுக்களில் ஈடுபடுத்தினாலும் கூட அனுபவமிக்கவர்களுடன் ஆலோசனை நடத்தியிருக்கலாம். எந்த எந்த விடயங்களைக் கதைக்கவேண்டும் என்று முடிவெடுக்கப்படாமல் செல்வது தான் தோன்றித்தமானது.

இந்தியாவிலுள்ள தென்னிலங்கை மீனவர்கள் விடுதலை செய்யப்படவேண்டும் என்றாலும் இன்று (15) புதுடில்லியில் நடைபெறுகின்ற மாநாடு அவர்களை விடுதலை செய்வதை மட்டும் நோக்கமாகக் கொண்டதாக இருந்தால் அதனை ஏற்க முடியாது.

அத்துடன், வெளிநாட்டுப் படகுகள் குறிப்பாக சீனப்படகுகள் இலங்கைக் கடற்பரப்புக்குள் வந்து தொழில்களில் ஈடுபட்டு வருகின்றமை முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாக உள்ளது.

அதேநேரம் ஒரு இரவில் 35ரூபாவால் எண்ணை விலை அதிகரிக்கப்பட்டமை பாரிய பிரச்சினையாகவிருந்தது. இதற்காக மீனவர்கள் போராட்டங்கள் நடைபெற்றன. 2012 ஒக்ரோபர் மாதம் இதற்கு நிவாரணம் வழங்குவதாக அரசாங்கம் அறிவித்தது. இருந்தும் அந்தப் பிரச்சினை இன்றும் வலுவாகவே உள்ளது.

இது வடக்கு மாத்திரமல்ல இலங்கையின் ஒட்டுமொத்த மீனவர்களுக்கும் பிரச்சினையாகவுள்ளது. இந்த விலையேற்றம் மற்றும் மானியங்கள் வழங்கவேண்டும் என பல போராட்டங்கள் முன்னெடுத்துள்ளோம். எதிர்ப்பு குரல் கொடுப்பவர்கள் விடுதலைப் புலிகள் என முத்திரையிடப்படுகின்றார்கள்.

மேலும் வடபகுதியில் 8000 மீனவக் குடும்பங்கள் இடம்பெயர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். நாங்கள் எல்லோரையும் மீள்குடியேற்றிவிட்டோம் என்று கடந்த ஆண்டு (2013) ஐ.நாவில் அரசாங்கம் தெரிவித்திருந்தது. இது ஒரு பொய் என்பதுடன், மீனவர்களின் மீள்குடியேற்றம் தொடர்பான விடயத்திற்கு தீர்வு காணப்படவேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இச்சந்திப்பில் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் தேசிய இணைப்பாளர் அன்டனி யேசுதாசன்,  வடமாகாண கடற்றொழிலாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் சூரியகுமாரன், வடமாகாண கடற்றொழிலாளர்கள் கூட்டமைப்பின் மன்னார் பிரதிநிதி எம்.ஆலம், வடமாகாண கடற்றொழிலாளர்கள் கூட்டமைப்பின் கிளிநொச்சி பிரதிநிதி எப்.ஜோசப், உட்பட மீனவ பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .