2025 ஜூன் 21, சனிக்கிழமை

138ஆவது உலக அஞ்சல் தினம் யாழில் அனுஷ்டிப்பு

A.P.Mathan   / 2012 ஒக்டோபர் 09 , பி.ப. 12:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


(சுமித்தி)


138ஆவது உலக அஞ்சல் தினம் - 'புதிய உலகிற்கான புதிய வியூகம்' எனும் தொனிப்பொருளில் இன்று யாழ். அஞ்சல் திணைக்களத்தில் கொண்டாடப்பட்டது.

வடமாகாண பிரதி அஞ்சல் அத்தியட்சகர் என்.ரட்ணசிங்கம் தலைமையில் யாழ். அஞ்சல் வளாகத்தில் உலக அஞ்சல் தின நிகழ்வுகள் இடம்பெற்றன.

தேசிய கொடி ஏற்றத்துடனும் அஞ்சல் கொடி ஏற்றத்துடனும் ஆரம்பிக்கப்பட்ட அஞ்சல் தினத்தில், அஞ்சல் சேவையினை சிறந்த முறையில் முன்னெடுப்பதற்காக அஞ்சல் உத்தியோகத்தர்கள் 'சத்தியபிரமாணம்' செய்து கொண்டனர்.

வடமாகாண பிரதி அஞ்சல் அதிபர் நாயகம் டி.பி.எல்.ஆர்.அபேயரட்ண - யாழ். அஞ்சல் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது...

இலங்கை மக்களுக்கும் மற்றும் வடமாகாண அஞ்சல் குடும்பத்தினருக்கும் அஞ்சல் தின வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்.

ஒக்டோபர் 9ஆம் திகதி உலகம் முழுவதிலும் 138ஆவது உலக அஞ்சல் தினமானது 193 நாடுகளில் கொண்டாடப்பட்டு வருகின்றது. பல நவீன தொடர்பாடல் சேவைகள் வளர்ந்து வரும் இவ்வேளையில் நாமும் பல சவால்களுக்கு மத்தியில் எமது சேவையை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்கின்றோம். நாம் அனைவரும் எமது அஞ்சல் சேவையை மிகுந்த செயற்றிறமையுடன் மக்களுக்கு வழங்குவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்.

'மக்கள் நல்லுறவை பேணும் பொருட்டு அஞ்சல் சேவையில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், அஞ்சல் சேவைகளை வழங்கும் பொழுது நிறுவனம் மற்றும் வாடிக்கையாளர்களை திருப்தி அடையச் செய்யும் நோக்கத்துடன், வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வாசல்படி நின்று நல்லுறவு சேவை வழங்கி 2 நூற்றாண்டு சேவையினை வழங்கும் அஞ்சல் சேவை மேலும் சக்தியை பெற்று, நவீன மயமாக்கத்துடன் வீடு வீடாக தனது சேவையை செய்து மக்களின் தேவைகளை ஈடுசெய்ய இவ்வுலகில் அஞ்சல் தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் யாழ். மாவட்ட அஞ்சல் அத்தியட்சகர் எஸ்.ஜெபரட்ணம், பிரதம அஞ்சல் அதிபர் எ.தர்மராஜா, பிரதிப் பிரதம தபாலதிபர் லோகரட்ணம் உள்ளிட்ட பல அஞ்சல் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .