2025 ஜூன் 18, புதன்கிழமை

உயர் பாதுகாப்பு வலய காணி விபரங்கள் சரியாக திரட்டப்படவில்லை: ஜனக்க

Kogilavani   / 2013 மார்ச் 11 , பி.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா, எஸ்.கே.பிரசாத்


'வடக்கில் மீள்குடியேற்றியுள்ள மக்களின் காணி தொடர்பான பிரச்சினையைத் தீர்த்து வைப்பதே எமது பிரதான நோக்கமாகும். எனினும் இதனை இங்குள்ள அரசியல் வாதிகள் குழப்பி வருகின்றனர்' என்று தெரிவித்துள்ள காணி மற்றும் காணி அபிவிருத்தியமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன், உயர் பாதுகாப்பு வலய காணிகளின் விபரங்கள் சரியாக திரட்டப்படவில்லை என்றும் சொன்னார்.

காணி பிரச்சினையை தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களின் பிரச்சினை என்று பார்க்காமல் ஒட்டு மொத்த இலங்கையின் பிரச்சினை என்று பார்க்க வேண்டும் என்பதுடன் யாழ்ப்பாணத்தில் உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து படையினரால் 5000 ஏக்கர் நிலம் விடுவிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் சொன்னார்.

யாழ் மாவட்டத்தில் நிலவும் காணிப்பிரச்சினைகள் தொடர்பிலான விசேட கலந்துரையாடல் யாழ் மாவட்டச் செயலகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது. யாழ். அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலின் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

 'வடக்கில் மீள்குடியேற்றியுள்ள மக்களின் காணி தொடர்பான பிரச்சயைத் தீர்த்து வைப்பதே எமது பிரதான நோக்கமாகும். இதனை இங்குள்ள அரசியல் வாதிகள் குழப்பி வருகின்றனர். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் சிலவற்றை எமது அமைச்சும்  நடைமுறைப்படுத்தி வருகின்றது.

வடக்கில் வாழும் மக்கள் மீள்குடியமர்ந்த பிரதேசத்தில் காணிப் பிரச்சினை, அபிவிருத்தியின் போது ஏற்படும் காணிப் பிரச்சினை, காணி உபயோகங்கள் தொடர்பான பிரச்சினை என காணி தொடர்பில் மூன்று வகையான பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.

இவ்வாறான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்ற  நிலையில் இங்குள்ள அரசியல்வாதிகள் நீதிமன்றத்திற்கு சென்று வழக்குத்தாக்கல் செய்துள்ளதால் காணி தொடர்பான பிரச்சினைகளை தீர்த்து வைப்பதில் காலதாமதமாகி வருகின்றது என்றும் அவர் சொன்னார்.

அத்துடன், "கிளிநொச்சி யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில்  2 இலட்சத்து 50 ஆயிரம் காணி பிரச்சினைகள் தீர்க்கப்படவுள்ளன. அந்த நிலையில், 21, 243 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டவுள்ளன. காணிப் பிரச்சினையை தீர்ப்பதற்கு ஒரு அலுவலகம் தேவை என்பதற்காக இந்த அலுவலகம் திறந்துவைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இங்குள்ள காணிப் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க முடியும்” என்றார்.

அத்துடன் "யாழ்ப்பாணத்தில் உயர்பாதுகாப்பு வலயப்பிரதேசத்தில் இருந்து படையினரால் 5000 ஏக்கர் நிலம் விடுவிக்கப்பட்டுள்ளது" என்றும் அவர் சொன்னார்.

"காணி பிரச்சினை தமிழ்,முஸ்லிம் சிங்கள மக்களின் பிரச்சினை என்று பார்க்காமல் ஒட்டு மொத்த இலங்கையின் பிரச்சினை" என்று பார்க்கவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

"உயர்பாதுகாப்பு வலயத்தில் 24 கிராம சேவையாளர் பிரிவில் உள்ள காணிகள் சுவீகரிக்கப்படவுள்ளதாக வெளியிடப்பட்ட செய்தி பொய்யாகும்" என்றும் அவர் சொன்னார்.

உயர் பாதுகாப்பு வலயம் இல்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ள நிலையில், உயர்பாதுகாப்பு வலயத்தில் மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ள 28,000 குடும்பங்கள் மீள்குடியேற்றம் செய்யப்படுவார்களா என ஊடகவியலாளர்களினால் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த யாழ். மாவட்ட கட்டளைத்தளபதி மஹிந்த ஹத்துருசிங்க, "28,000 குடும்பங்கள் மீள்குடியேற்றம் செய்வதற்கு இல்லை என்றும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தியினால் வெளியிடப்பட்ட அறிக்கை பொய்யானதாகும்" என்றார்.

அத்துடன் 6224 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாகவும் அதில் 3000 ஏக்கர் அரச மற்றும் தனியார் காணிகள், என்றும் ஆவணங்கள் இல்லாத காணிகள் காணி உரிமைகள் சுற்றறிக்கையின் பிரகாரம் சுவீகரிப்பதற்கான உரிமை இருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

இந்நிலையில் யாழ் மாவட்டச் செயலகத்தில் காணி  தொடர்பான கலந்துரையாடலை நடைபெற்ற மண்டபத்திற்குள் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஊடகவியலாளர்கள் எவரும் அனுமதிக்கப்படவில்லை.

இந்தக்கலந்துரையாடல் நடைபெற்ற மண்டபத்திற்கு கொழும்பில் இருந்து வருகை தந்த ஊடகவியலாளர்களை மட்டுமே படையினர்  அனுமதித்தனர்.

இந்தக்கலந்துரையாடலில் காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனகபண்டார தென்னக்கோன், காணி மற்றும் காணி அபிவிருத்தி பிரதி அமைச்சர் சிறிபால கம்லத், காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் அசோக் பீரிஸ், வடமாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி டி சில்வா, யாழ் மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க, யாழ் மாவட்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் இந்து கருணரட்ன, பிரதேச செயலாளர்கள், இராணுவ உயரதிகாரிகள் மற்றும் கடற்படையினர் எனப்பலரும் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .