2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

படையினர் பால் கறக்கின்றனர்: ஐங்கரநேசன்

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 12 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-குணசேகரன் சுரேன்

வன்னியில் நிலங்களை மட்டுமல்லாது மாடுகளையும் அபகரித்து வைத்திருக்கும் படையினர் அந்த மாடுகளிலிருந்து பால் கறந்து கொழும்பிலுள்ள நிறுவனம் ஒன்றிற்கு ஏற்றுமதி செய்கின்றனர்' என வட மாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்தார்.

வட மாகாண சபையின் வரவு - செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதம் இன்று (12) நடைபெற்று வருகின்றது. இதில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'யுத்தம் முடிவடைந்த பின்னர் வட பகுதியிலுள்ள இராணுவத்தினருக்கு என்ன வேலை கொடுப்பது என்று தெரியாமல் அரசாங்கம் அவர்களை விவசாயம் செய்வதற்கும் கடை நடத்துவதற்கும் பால் கறப்பதற்கும் ஈடுபடுத்தி வருகின்றது.

வட மாகாணத்தில் கிணற்றிலிருந்து அதிகளவான குடிநீர் எடுக்கின்றமையால் நிலத்தடிநீர் மாசடைகின்றது. அத்துடன் இலங்கையிலுள்ள புற்றுநோயாளர்களில் அதிகமானவர்கள் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இதற்கான காரணம் அவர்களின் உணவுகளில் இரசாயனப் பதார்த்தங்கள் கலக்கப்பட்டிருப்பதாகும்.

விவசாயிகள் தங்களால் உற்பத்தி செய்யப்படுகின்ற பொருட்களை தாங்களாகவே சென்று சந்தையில் விற்பனை செய்ய வேண்டும் என்றும் அவர்கள் தங்களின் விவசாய நடவடிக்கையில் புதிய நுட்பங்களைப் பயன்படுத்தி உற்பத்திகளை தரமுயர்த்த வேண்டுமென்றும்' கூறினார்.

'2014ஆம் ஆண்டிலிருந்து விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படுகின்ற பொருட்களை சந்தையில் விற்பனை செய்கின்ற போது 10 வீதத்திற்குள் கொடுக்கும் கழிவு அமைய வேண்டும்.

அத்துடன் வெளி மாவட்டங்களிலிருந்து இங்கு பரீட்சார்த்தமாக நடப்படும் மரங்களான சந்தன மரம், இறப்பர் மரம் போன்ற மரங்கன்று மூலம் புதிய தொற்றுக்கிருமிகள் இங்கு வருகின்றன.

வட பகுதிக்குரிய மரங்களாக கறுத்தக்கொழும்பான் மா மரம், அம்பலவி மா மரம் போன்றன காணப்படுகின்றன. ஆனால் தற்போது இம்மா மரங்கள் குறைவாகவே காய்க்கின்றன.

ஏனெனில் ஆரம்பத்தில் நாங்கள் இலிங்க முறையில் மா மரத்தை நட்டோம். ஆனால் தற்போது மரங்களை செயற்கை முறை மூலம் ஒட்டி இனப்பெருக்கம் செய்கின்றோம். இதனால் ஒரே மரபுரிமை காணப்படாமல் மா மரங்களுக்கு தொற்று நோய்கள் ஏற்படுகின்றன' எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .